Follow me on Twitter RSS FEED

SCIENCE & TECHNOLOGY

Posted in


பார்வை வழங்கக்கூடிய அதிநவீன 'சிப்'


பார்வை இழந்தவர்களுக்கு பார்வையை வழங்கக்கூடிய அதிநவீன 'சிப்' ஒன்றினை ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதன் படி கண்களின் பின்பகுதி விழித்திரையில் 'சிப்' ஒன்று பொருத்தப்படுகின்றது.

இதனூடு ஒளிகடத்தப்படும்போது அது இலத்திரனியல் தூண்டல்களாக மாற்றப்பட்டு பார்வை நரம்புகளுக்குச் செலுத்தப்படுகின்றது.

பார்வையற்றவர்களுக்கு இதன்மூலம் பொருளை இனங்கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது.

இந்தச் 'சிப்' பானது 'ரெடினிடிஸ் பிக்மென்டோஸா' எனப்படும் பரம்பரை கண்நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பெரிதும் பயனளிக்குமென நம்பப்படுகின்றது.

ஏ.ஜி. என்ற ஜேர்மனிய நிறுவனம், 'ஒப்தல்மிக்' ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இதனைத் தயாரித்துள்ளது.

இவ்வுபகரணத்தில் சுமார் 1500 ஒளி உணர் 'சென்ஸர்'கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான காணொளிகளை இங்கு காணலாம்.


அதிவேக 'ஹைப்பர்சொனிக்' ஜெட் விமானங்கள் : நாஸா உருவாக்கம்


அதிவேக 'ஹைப்பர்சொனிக்' (Hypersonic Jets) ஜெட் விமானங்களை உருவாக்கவுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது.

'ஹைப்பர்சொனிக்' என்பது ஒலியின் வேகத்தினை விட 5 மடங்கு வேகமாகசெல்லுதலாகும். ஒலியின் வேகம் ஈரப்பதம் இல்லாத காற்றில் செக்கனுக்கு 343.2 மீட்டர்களாகும்.

விண்வெளிக்கென தயாரிக்கப்பட்ட போதிலும் இவ்விமானம் பயணிகள் விமான சேவைக்கு உபயோகப்படுத்தப்படுமாயின் நியூயோர்க்கிலிருந்து சிட்னிக்கு 2 1/2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

இதற்கென நாஸா அடுத்த 3 வருடங்களுக்கும் தலா 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஒதுக்கீடு செய்யவுள்ளது.


விற்பனைக்கு வருகிறது கூகுளின் 'குரோம் நெட்புக்'


கூகுள் நிறுவனம் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் கூகுள் தனது குரோம் இயக்குதளத்தை ( Chrome OS ) அறிமுகம் செய்திருந்தது.

தற்போது 'இன்வென்டெக் ' எனப்படும் தாய்வான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே இதனை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏஸர் மற்றும் ஹெவ்லட் பெக்கார்ட் நிறுவங்கள் கூகுளின் இவ்வியங்குதளத்தினை கொண்டியங்கும் கணனிகளை உருவாக்கிவருவதுடன் அவை இவ்வருட இறுதியில் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கூகுள் தனது சொந்த தயாரிப்பான நெக்ஸஸ் (Nexus) எனும் 'ஸ்மார்ட்' போன்களை விற்பனை செய்திருந்தது. எனினும் இவை சந்தையில் வரவேற்பைப் பெறவில்லை.

இருந்தபோதிலும் கூகுள் தனது அடுத்தமுயற்சியில் இறங்கியுள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

5 ஆண்டுகள் சூரிய ஒளியில் பறக்கும் விமானம்


5 ஆண்டுகள் சூரிய ஒளியில் பறக்கும் விமானம்ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு விமானம் ஒன்றை போயிங் நிறுவனம் தயார் செய்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் தயாரிக்க போயிங் நிறுவனத்திடம் அமெரிக்க இராணுவம் வேண்டுகோள் விடுத்த்ளளது. சோலார் ஈகிள் என்ற பெயரில் உளவு விமானத்தை தயாரித்துள்ள போயிங் விமானம் அதை பரிசோதித்து வருகிறது. இந்த விமானம் நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம். இந்த விமானத்தின் இறக்கையில் உள்ள சோலார் தகடுகள், பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும். 

இதன் மூலம் விமானத்தின் மின்சார மோட்டார்கள் மற்றும் புரொப்பலர்கள் இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து, படங்கள் மற்றும் உளவுத் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த விமானம் அனுப்பிக் கொண்டிருக்கும். முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் விமானம், 30 நாள் நிற்காமல் பறக்கவுள்ளது. இந்த சோலார் ஈகிள் விமானம் 2014 ஆம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கணினியா? தேனீயா? அறிவாளி



சிக்கலான கணிதத்திற்கு, கணினியை விட தேனீக்கள் தீர்வளித்துள்ளதாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. 

பிரிட்டனை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் தேனீக்கள் போக்குவரத்து குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில், விற்பனை பிரதிநிதியின் சிக்கலான போக்குவரத்து வழிக்கு, கணினியை விட தேனீக்கள் எளிதாக தீர்வளித்துள்ளன என்று தெரிவித்துள்ளனர். 

பல்வேறு இடங்களுக்கு விற்பனை பிரதிநிதிகள் செல்வதற்கான வழிகள் குறித்து, கணினி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதன் மூலம், அதிக இடங்களுக்கு, குறுகிய நேரத்தில், எளிதாக சென்று சேர்வதற்கான குறுக்கு வழிகளை கணினி உருவாக்கி கொடுத்தது. 

ஆனால், பிரிட்டன் விஞ்ஞானிகள் நடத்திய தேனீக்கள் குறித்த ஆய்வில், கணினி உருவாக்கிய வழிகளை விட, அதிக வழிகளை தேனீக்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. தேனீக்கள் நாள்தோறும், தேனை சேகரிப்பதற்காக, பூக்களைத் தேடி அதிக தூரம் பயணம் செய்கிறது. 

பறப்பதற்காக, அதிக சக்தியை செலவழிக்கும் தேனீ, குறுகிய நேரத்தில், அதிக பூக்களுக்கு செல்கிறது. இதற்காக, குறுக்கு வழிகளை அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்தது. இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது: 

தேனை தேடி, தேனீக்கள் அதிக பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், அவை அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றன. இதற்காக, கணினியின் உதவியுடன், செயற்கை பூக்களை கொண்டு, தேனீக்களின் பயண வழியை கண்காணித்தோம். 

அதில், தேனீக்கள் மிகக்குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்கு செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துவதை கண்டறிந்தோம்.அந்த வழிகள், விற்பனை பிரதிநிதி செல்வதற்காக, கணினி உருவாக்கி கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம், கணினியின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.





சூரிய சக்தியில் வயர்களற்ற கணினி 'கீபோர்ட்' : லொஜிடெக் அறிமுகம்



லொஜிடெக் (Logitech) நிறுவனம் அண்மையில் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற கீபோர்ட்டை (K750) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் இருந்த வயர்களற்ற (Wireless) கீபோர்ட்கள், பற்றரிகளின் மூலமே இயங்கி வந்தது. ஆனால் லொஜிடெக்கின் புதிய கீபோர்ட்கள் சூரிய ஒளியின் மூலம் இயங்குகிறது.

ஒரு தடவை முற்றாக 'சார்ஜ்' செய்தால், சுமார் 3 மாத காலம் வரை தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்த முடியுமென லொஜிடெக் உறுதியளிக்கின்றது.

இது 80 அமெரிக்க டொலர்களில் விற்பனையாகிறது.





எவரஸ்டிலும் 3ஜி சேவை




உலகின் உயர்ந்த சிகரமான எவரஸ்டிலிருந்தும் இனிமேல் இணையத்தினை உபயோகிக்க முடியும். 


வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளமுடியும்.

3 ஜி வலையமைப்பினூடக இவையனைத்தையும் அவ்வுயரத்தில் சாத்தியப்படுத்தியுள்ளது நேபாளிய தொலைத்தொடர்பு நிறுவனமான என்செல் .

சுமார் 8 தொலைத்தொடர்பு கட்டமைப்புக்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5200 அடி உயரம் வரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்செல் என்பது சுவீடன் நாட்டு நிறுவனமான டெலிசொனெராவினுடையதாகும்.

இதுவரைகாலமும் மலையேறுபவர்கள் செய்மதி தொலைபேசிகள் மற்றும் சாதாரண கைத்தொலைபேசி வசதியை மட்டுமே பெற்றுவந்தனர்.

இனிமேல் அவர்கள் காலநிலை தொடர்பான அறிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


கனவைப் பதியலாம்
மனித மூளை
மனித மூளை
கனவுகளை மின்னியல் ரீதியாக பதிவு செய்து அதற்கு கற்பிதம் கூற தாம் திட்டமிடுவதாக ஒரு அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார்.
கனவுகள் ஏன் ஏற்படுகின்றன எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியப் பயன்படக் கூடிய மூளையின் உயர் மட்ட செயற்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைமை ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக Journal Nature scientists என்னும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார்.
கனவுகளை பதிவு செய்யக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கான நோக்கம் என்பது ஒரு அலாதியான விசயந்தான். ஆனால், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர் குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்காவது அது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்து விளக்குகிறது.
கனவைப் பதியலாம்
கனவைப் பதியலாம்
ஒருவரது முளையின் கலங்கள் அல்லது நியூரோன்கள் ஒரு விடயத்துடன் அல்லது ஒரு கருத்தியலுடன் தொடர்புபட்டதாக இருப்பதாக அந்த ஆய்வாளர்களின் ஒரு ஆய்வு கூறுகிறது.
உதாரணமாக பரிசோதனைக்கு உட்படும் ஒரு தொண்டர், நடிகை மர்லின் மன்றோவை நினைக்கும் போது அந்த நினைப்புடன் தொடர்புடைய அவருடைய மூளையில் இருக்கும் நியோரோன் பற்றிக்கொண்டு ஜொலிக்கும்.
பரிசோதனைக்கு வந்த தொண்டர்களுக்கு தொடர்ச்சியான பல படங்களை காண்பித்தபோது, பல தரப்பட்ட விடயங்கள், பொருட்கள் மற்றும் கருத்தியலுடன் சம்பந்தப்பட்ட நியூரோன்களை ஆய்வாளர்களால் அடையாளம் காண முடிந்தது.
தூங்கும் தொண்டர்களின் மூளையின் அலைகளை புரிந்துகொள்வதும், அதில் இருந்து அவர்கள் காணுகின்ற கனவுகளை புரிந்து கொள்ள விழைவது என்பவைதான் ஆய்வாளர்கள் எடுக்கப்போகின்ற அடுத்த முயற்சியாகும்.



நவீன வசதிகளுடன் யாஹூ மெயில்

2005 ஆம் ஆண்டின் பின்னர் தனது 279 மில்லியன் பாவனையாளர்களுக்காக யாஹூ மேற்கொண்டுள்ள பாரிய மாற்றம் இதுவாகும். 


சமூக வலைப்பின்னல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் வசதிகளானவை:

அதிவேகமான செயற்பாடு - ஜீ மெயில் மற்றும் ஹொட்மெயில் சேவையினை விடவும் முன்னரை விட இருமடங்கு வேகத்திலும் இயங்குமென யாஹூ உத்தரவாதமளிக்கின்றது.

சமூகவலைப்பின்னல் தொடர்பு- யாஹூ மெயிலில் இருந்தவாறே பேஸ்புக் மற்றும் டுவிடரில் அப்டேடிங் செய்யும் வசதி. மேலதிகமாக உடனடி மேசேஜிங் IM ( Instant messaging ) மற்றும் குறுந்தகவல் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இன்பொக்ஸில் இருந்தவாறே படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்வையிடல் -இன்பொக்ஸில் இருந்தவாறே பிக்காஸா (Picasa) பிளிக்கர் (Flickr) மற்றும் யூடியூப் (YouTube) இணையத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிடும் வசதி.

இலகுவாக மின்னஞ்சல்களைத் தேடுதல் - பாவனையாளர் தனக்குத்தேவையான மற்றும் முக்கியமான மின்னஞ்சல்களைத் தேடும் வசதி. திகதி, அனுப்பியவர், கோப்புக்கள் ( Attachment ) ஆகியவற்றின் அடிப்படையில் மின்னஞ்சல்களை தேடிப்பெற முடியும்.

ஸ்பேம்களில் இருந்து பாதுகாப்பு - ஸ்பேம்களில் இருந்து உச்ச பாதுகாப்பு அளிக்கின்றது.

கூகுள், மைக்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக யாஹூ சற்று பின் தள்ளப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் இத்தகைய மாற்றங்களினூடாக அது இழந்த தன் இடத்தினை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சீனாவின் அதிவேக சுப்பர் கணினி: வேகம் 2.507 பீடாபுலொப்ஸ்
உலகின் அதி வேக சுப்பர் கணினியை (Super Computer) கொண்ட நாடு என்ற பெருமையை சீனா நேற்று பெற்றுக்கொண்டது.

டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படும் கணினியே அது. இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாகும்.

இது மற்றைய சுப்பர் கணினிகளைவிட 43 வீதம் வேகம் கூடியது.

இக்கணினியானது சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான மொத்த செலவு 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள். சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோற்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது.

இக்கணினி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் ( CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) கொண்டுள்ளது.

முதன் முறையாக 2009 ஆம் ஆண்டு இக்கணினி உருவாக்கப்பட்டது. அதன்போது இது உலகின் 5 ஆவது வேக கணினி என்ற பெருமையை மட்டுமே கொண்டிருந்தது.

ஆனால் தற்போது இது நன்கு மேம்படுத்தப்பட்டதையடுத்து உலகின் 'அதிவேக கணினி' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இதுவரை அமெரிக்காவின் கிரேஸி எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணினியாக இருந்து வந்தது. இது 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டது. இதன் வேகம் 1.75 பீடாபுலொப்ஸ் (Petaflops) ஆகும்.

எனினும் சீனா அதனை டியானி ( Tianhe ) - 1 A மூலம் முறியடித்துள்ளது.







விண்வெளியை சுத்தம் செய்ய செயற்கைகோள்

அமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஆய்வுப்பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் இந்த செயற்கை கோள்கள் செயல் இழந்து குப்பையாகி விடுகின்றன. சில செயற்கைகோள்கள் உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகின்றன. இவை விண்வெளி குப்பைகள் ஆக சுற்றி வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் முலம் சுமார் 5 ஆயிரத்து 500 டன் எடையுள்ள குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன. 

இந்த குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைகோள்கள் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் தகவல் தொடர்புகள் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்க்க இங்கிலாந்து விஞ்ஞானிகள் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன்படி மிகச்சிறிய நானோ செயற்கைகோள்களை தயாரித்து அவற்றை விண்வெளிக்கு அனுப்பி அதன் முலம் விண்வெளி குப்பைகளை சேகரித்து அழிக்கப் போகிறார்கள். 

இந்த குப்பைகளை சேகரிக்கும் வகையில் இந்த நானோ செயற்கைகோளில் காந்த வலை ஒன்றும் இணைக்கப்படும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் குப்பைகளை கவர்ந்து இழுக்கும். பின்னர் இவற்றை பூமியின் மேற்பரப்புக்கு இழுத்து வரும். அப்போது இந்த குப்பைகளுடன் சேர்ந்து நானோ செயற்கைகோளும் எரிந்து சாம்பலாகி விடும். அடுத்த ஆண்டு இதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்குகிறது.



உலகத்திலேயே பெரிய புத்தகம்
உலகத்திலேயே பெரிய புத்தகம் ஒன்றை ஆஸ்திரேலிய நாட்டு பதிப்பகம் தயாரித்து உள்ளது. இந்த புத்தகம் ஒரு அட்லஸ் ஆகும்.

பிராங்பர்ட் நகர புத்தக கண்காட்சியில் இடம் பெற்றது. இந்த புத்தகம் 61/2 அடி உயரமும் ஒன்பதே முக்கால் அடி அகலமும் உள்ளது. இது 128 பக்கங்கள் கொண்டது. இது பதிப்பாளர் கார்டன் சியர்ஸ்சின் மூளையில் உதித்த எண்ணத்தின் செயல் வடிவம் ஆகும்.
இது போல பெரிய புத்தகம் கடந்த 350 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டது இல்லை என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

 நிலவில் காய்கறிகள்
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களில் காய்கறிகளை விளைவிக்க முடியும் என, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் நிலவும் தட்பவெப்ப நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை தவிர வேற்று கிரகங்களில் காய்கறிகளை விளைவிப்பது குறித்து அமெரிக்காவை சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்காக அவர்கள் கிரின் ஹவுஸ் என்ற பிரத்யேக ஆய்வு கூடம் ஒன்றை அமைத்தனர். இந்த ஆய்வகம் குறித்து விஞ்ஞானி பில் சாட்லர் கூறியதாவது:கிரின் ஹவுஸ் ஆய்வகத்தில் காற்று, தண்ணீர் மற்றும் சாதாரண சூழ்நிலைகள் இருக்காது. சந்திரனில் நிலவும் தட்பவெப்ப நிலைகளை மனதில் கொண்டு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வகம் முழுவதும் 18 அடி நீளம் கொண்ட குழாய்கள் அமைக்கப்பட்டு, மேல்புறம் சிறு சிறு துளைகள் அமைக்கப்பட்டன.
அதில் சிறிய சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு, குழாய்களில் காய்கறி விதைகள் நிரப்பப்பட்டன. 10 நிமிடத்திற்கு ஒரு முறை சோடியம் விளக்குகள் ஒளிர செய்து அணைக்கப்பட்டன.மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், குழாய்க்குள் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. என்ன ஆச்சரியம்?
30 நாட்களில் அதிலிருந்த விதைகளிலிருந்து மொட்டுக்கள் துளிர்விட்டு, மேலிருந்த துவாரம் வழியாக வெளியே வர துவங்கின. இந்த முறையை வேற்று கிரகங்கள் மட்டுமின்றி, மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களிலும் அமைத்து காய்கறி விளைவிக்க முடியும்.இவ்வாறு பில் சாட்லர் கூறினார்.


ஒரு வானம், மூன்று சூரியன்கள்
நமது பூமியில் இருந்து 149 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் எச்.டி. 188753 என்ற நட்சத்திரத்தை வியாழன் போன்ற ஒரு ராட்சத வாயுக்கோள கிரகம் மிக நெருக்கமாக மூன்றரை நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இந்தக் கிரகம் சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தைக் காட்டிலும் இருபது மடங்கு குறைவான தூரத்தில் அதன் நட்சத்திரத்தை வலம் வந்துகொண்டிருக் கிறது.

இந்தக் கிரகம் வலம் வந்துகொண்டிருக்கும் மைய நட்சத்திரத்தை, வேறு ஒரு ஜோடி நட்சத்திரங்கள் சுற்றுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால், அந்த இரு நட்சத்திரங்களும் ஒன்றையொன்று 156 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இந்த இரட்டை நட்சத்திரங்கள், சூரியனை சனி யுரேனஸ் கிரகங்கள் சுற்றிவரும் தொலைவில் அந்த மைய நட்சத்திரத்தை 25.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுகின்றன. இந்தக் கிரக அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி சர்க்கஸ் என்று அழைக்கின்றனர்.
மேலும், இந்த மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறு நிறமாக இருக்கின்றன. பிரதான நட்சத்திரம் மஞ்சள் நிறத்திலும், தொலைவில் வலம் வந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் இருக்கின்றன. எனவே இந்த வாயுக்கோள கிரகத்தின் சந்திரனில் இருந்து பார்ப்போருக்கு வானில் அதிசயக் காட்சியாக மூன்று சூரியன்கள் தெரியும்.
மேலும் மூன்று சூரியன் களும் மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று வெவ்வேறு நிறங்களில் இருப்பதால் வானம் வர்ணஜாலமாகக் காட்சிஅளிக்கும். தினமும் மூன்றுமுறை சூரிய உதயங்களும், அஸ்தமனங்களும் நிகழும். அதைப் போல வெப்பமும் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

4,000 ஆண்டுகளுக்கு பழைமைவாய்ந்த ஆரிய நகரம்

ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம். இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை கண்டுபிடித்துள்ளனர். பிபிசி தொலைக்காட்சியில் குறிப்பிட்ட தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம், இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார்.
இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும் இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர். அப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது.
இதையடுத்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை அவரது குழு மேற்கொண்டு வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில் மேல் நோக்கு வளைவான அமைப்பு கூடிய 20 வீடுகள், மேக்அப் சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள், ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் ஆகியவை அடங்கும். ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில் ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக் கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார். இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை விசிட்டிங் பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அசுர வளர்ச்சியடைந்து வரும் குரோம் : தடுமாறும் எக்ஸ்புளோரர்!


கூகுளின் குரோம் இயங்குதளமானது அசுரவேகத்தில் வளர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இயங்குதளமானது தனது ஆதிக்கத்தினை தொடர்ந்து இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அதன் பாவனை வீதம் 50 % குறைவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டளவில் இது 83% இயங்குதள சந்தையை கொண்டிருந்தது.

ஃபயர்பொக்ஸ் இயங்குதளம் ஏற்ற இறக்கங்கள் இன்றி தனது இடத்தினை தக்கவைத்துள்ளது.

2008 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கூகுள் குரோமானது இண்டர் நெட் எக்ஸ்புளோரரை வேகமாக முந்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இண்டர் நெட் எக்ஸ்புளோரர் தனது 9 ஆவது தொகுப்பினையே பெரிதும் நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குரோமின் வளர்ச்சியானது பயர்பொக்ஸினையும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேவையேன்பதிற்கு அப்பால் இயங்குதளங்கள் பெரிய வர்த்தக நடவடிக்கையென்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி இயங்குதளத்தினை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும். 

Download Chrome 6 here


12 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்

பிரபல தேடல் பொறியான ( சேர்ச் இன்ஜின் ) கூகுள் தனது 12 ஆவது வருட நிறைவை இன்று கொண்டாடுகின்றது.

கூகுள் சிறப்பு நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் தனது லோகோவில் மாற்றங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இம்முறை இதனை நினைவுபடுத்தும் வகையில் கூகுள் லோகோவுக்குப் பதிலாக விசேட சித்திரமொன்றினை வெளியிட்டுள்ளது. கூகுளின் பெயர் பொறிக்கப்பட்ட கேக் சித்திரமே அதுவாகும்.
'ஸ்டக்ஸ்னெட்' வைரஸ் : இணையத் தீவிரவாதத்தின் முதல்படி







உலகின் முதலாவது அதி மேம்பட்ட இணைய ஆயுதம் ஈரானின் அணுச் சக்தி நிலையங்களைத் தாக்க வடிவமைக்கப்பட்டிருக்கலாமென நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கணினி வைரஸான ' ஸ்டக்ஸ்னெட்' இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட மிகவும் அதிநவீன தீங்கு நிரலாக (மெல்வெயார்) கருதப்படுகின்றது.
உலகம் முழுவதும் சுமார் 45,000 வலையமைப்புக்களை மேற்படி தீங்கு நிரல் தாக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் ' ஸ்டக்ஸ்னெட்' வைரஸ் கண்டறியப்பட்டது.
எனினும் நாடொன்றின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வைரஸ் ஒன்று இனங்காணப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.
' ஸ்டக்ஸ்னெட்' வைரஸானது கணினிகளின் மென்பொருளை மீள் ப்ரோகிராம் செய்யக்கூடியது. மேலும் வேறுபட்ட பல கட்டளைகளைச் செயற்படுத்துமாறு கணினிகளைப் பணிக்கக்கூடியது.
மேற்படி வைரஸானது யு.எஸ்.பி. பென் ட்ரைவர்களினூடாகக் கணினிகளுக்கிடையில் பரிமாற்றப்படக்கூடியது. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இணையப் பாவனையைக் கட்டுப்படுத்தியுள்ள கணினிகள் கூட ' ஸ்டக்ஸ்னெட்' இற்கு இலக்காகும் சாத்தியமுள்ளன.
இவ்வைரஸ் அதிகமாக சிமென்ஸ் நிறுவனத்தின் மென்பொருட்களையே தேடுகின்றது. பிறகு அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றது. இந்த வைரஸானது ஏற்கனவே தனது நாசகார வேலையைத் தொடங்கிவிட்டது.
ஆனால் தற்போதுதான் தங்களுக்கு இது தெரியவந்திருக்கின்றது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 


 

ஓசோன் படலம் மீண்டும் பழைய நிலைக்கு

ஓசோன் படலம் மீண்டும் பழைய நிலைக்கு
ஓசோன் படலம் ஒன்றும் காணாமல் போய் விடவில்லை என்றும் இந்த நூற்றாண்டின் மத்திய பகுதியில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடும் எனவும் கணித்துள்ளனர் ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள். 
ஓசோன் படலத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சிலவற்றால் உலகம் முழுதிலும் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு தோல் புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பது தான் ஓசோன் படலத்தின் முக்கிய வேலை.
கடந்த சில ஆண்டுகளாகவே அண்டார்டிகா பனி கண்டத்தில் ஓசோன் அளவு குறைந்து காணப்படுவதும் அது குறித்த விழிப்புனர்ச்சிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது போன்று ஓசோன் குறைந்து காணப்படுவதையே ஓசோன் படலத்தில் ஓட்டை என பொதுவாக பலர் கூறுவது வழக்கம். 
துருவ பகுதிகளுக்கு வெளியே உள்ள ஓசோன் படலம் 2048 ஆம் ஆண்டில் 1980 இல் இருந்த பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்பது தற்போதைய ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் கணிப்பு. 
அண்டார்டிகா போன்ற துருவ பகுதிகளில் ஓசோன் படலம் 2073 இல் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச ஓசோன் தினத்தையொட்டி இந்த ஆராய்ச்சி சமர்பிக்கப்பட்டுள்ளது. 
1980 களில் அண்டார்டிகா பகுதிகளில் இருந்த ஓசோன் படலத்தையும் , தற்போது அதே பகுதியில் ஓசோன் குறைவினால் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ஒப்பிடும் படியான படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் உள்ள அடர்ந்த ஊதா நிறம் ஓசோன் அளவு குறைந்துள்ளதை காட்டுகிறது.

விண்வெளிக்கு வணிக நோக்கத்தில் சுற்றுலா

அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள போயிங் விமான நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் விமானங்களை தயாரித்து பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவின் நாசாவில் இருந்து விண்வெளிக்கு அரிய கண்டுபிடிப்புக்காக மட்டுமே இதுவரை விண்வெளி ஓடம் அனுப்பப்பட்டு வந்தது. 

இந்நிலையில் விண்வெளிக்கு வணிக நோக்கத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல போயிங் நிறுவனம் ஸ்பேஸ் அட்வென்ஞ்சர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாசாவின் உதவியுடன் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப சிஎஸ்டி-100 ரக விமானத்தை அது தயாரிக்கிறது. 

இந்த விமானம் 7 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும். இந்த பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை பயணிகள் பார்க்க முடியும். நாசா விண்வெளி வீரர்களின் உதவியுடன் விண்வெளி பயணத்தை மேற்கொள்ள போயிங் நிறுவனம் பேச்சு நடத்துகிறது. 

2015ம் ஆண்டு வாக்கில் தொடங்கவுள்ள விண்வெளி பயணத்துக்கு, இப்போதே முன்பதிவு செய்ய சிலர் தயாராகி விட்டனர். இதற்குமுன் விண்வெளி சுற்றுலாவுக்கு ரஷ்யாவில் இருந்து பயணிகள் சென்று வந்தனர்.

பிரீடம் ஷிப் என்ற மிதக்கும் நகரம்



பிரீடம் ஷிப் என்ற மிதக்கும் நகரம்
உலகின் பெரும் கப்பல்கள் பற்றி படித்திருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், மிதக்கும் நகரமாய் ஒரு கப்பல் உருவாக போகிறது. அப்படியென்ன அது பிரமாதம் என்கிறீர்களா? ஒரு மைல் தூரத்துக்கு 25 மாடிக் கட்டிடங்கள் அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அதுதான் பிரீடம் ஷிப் என்ற மிதக்கும் நகரம் இதன் நீளம் ஆயிரத்து 317 மீட்டர்கள். 

அகலம் 221 மீட்டர்கள். உயரம் 103 மீட்டர்கள். இந்தக் கப்பல் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட உயரமானது. இரண்டு கால்பந்து மைதானங்கள் சேர்ந்த அகலம் கொண்டது. இவ்வளவு பெரிய மெகா கப்பல் கடலில் மிதப்பது மட்டுமல்ல, உலகைச் சுற்றிலும் வலம் வரவும் போகிறது. பிரீடம் ஷிப் பற்றிய எல்லா தகவல்களுமே பிரமிக்க வைக்கின்றன. 

இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மொத்தம் 17 ஆயிரம் குடியிருப்பு பிரிவுகள் அமையும். இக்கப்பல் தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் மேற் கொண்டபடி இருக்கும். இங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்தபடி உலகைச் சுற்றி பார்க்கலாம். இந்தக் கப்பல் தளங்களின் உச்சியில் சிறு விமானங்கள் இறங்கி ஏறும் வகையில், ஆயிரத்து 158 மீட்டர் நீளமுள்ள ஓர் ஓடுபாதையும், விமானங்களை நிறுத்துவதற்கான இடங்களும் அமைக்கபடும். 

உல்லாச படகுகளை நிறுத்தும் பகுதி, ஒரு மிக பெரிய வணிக வளாகம், பள்ளி, கல்லூரி, கோல்ப் மைதானம், சைக்கிள் ஓட்டும் பாதைகள், ஓய்வாய்க் கழிப்பதற்கு 200 திறந்த வெளி பகுதிகள் ஆகியவையும் அமையும். இம்மாபெரும் கப்பலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. இதில் பல உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டு அமைப்புகள் இருக்கும். விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்ற வசதிகளும் உண்டு. டென்னிஸ், கூடைபந்து, பவுலிங் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம். 

நீச்சல் குளம், பசும்புல்பரப்பு, ஸ்கேட்டிங் வளையம், செயற்கைக் கடற்கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் வசதி போன்றவை உண்டு. ஒவ்வொரு குடியிருப்பிலும் 100 உலக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், கப்பல் செல்லும் கடலை ஒட்டிய நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளையும் காணலாம். இணைய வசதியும் உண்டு. இந்த மிதக்கும் நகரத்துக்கு என்று ஒரு தனி பாதுகாப்பு படைம் உண்டு. 

தவிர, கப்பலின் நுற்றுக்கணக்கான பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கபடும். இக்கப்பலின் மற்றொரு சிறப்பம்சமாக இது இயற்கைக்கு உகந்ததாக இருக்கும். இதன் கழிவுகளால் கடல் பாதிக்கபடாமல் அவை மறுசுழற்சி செய்யபடும் அல்லது பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கபடும். இவ்வளவு பெரிய கப்பலை கடலில் நகர்த்துவது என்பது எளிதான விஷயமல்ல. 

அதற்கென்று, தலா 3 ஆயிரத்து 700 குதிரைசக்தி திறன் கொண்ட 100 டீசல் இயந்திரங்கள் பயன்படுத்தபடும். கற்பனைக்கு அப்பாற்பட்ட இக்கப்பலை கட்டி முடிக்க முன்றாண்டுகளும், பல்லாயிரம் கோடி ருபாயும் ஆகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆதங்கமான ஒரே விஷயம், இக்கப்பலில் நிரந்தரக் குடியிருப்பு பெறவும், பயணம் செய்யவும் கோடீசுவரர்களால் மட்டுமே முடியும்.