Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடி UTOCS அமைப்பினால் சேகரிக்கப்பட்ட நிதி ACJU கல்குடாக் கிளையினரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

Posted in
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் வேண்டுகோளுக்கமைவாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் பாதிப்படைந்தவர்களுக்காகவும் அதனைத் தொடர்ந்து வடமத்திய மாகாணத்தில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களில் பாதிப்படைந்தவர்களுக்குமான நிதி ACJU பிராந்தியக் கிளைகளின் மேற்பார்வையில் பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் ஊடாக இலங்கையிலுள்ள அனைத்துப் பாகங்களிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் ஜம்மிய்யதுல் உலமா கல்குடாக் கிளையின் மேற்பார்வையின் கீழ் ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் (United Tractor Owners' Co-operative Society) காவத்தமுனை, காகிதநகர் ஆகிய பிரதேசங்களில் கடந்த 26.05.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிதி சேகரிப்பில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு பெருந்தொகைப் பணத்தினை வசூல் செய்திருந்தனர். 

மேற்படி சேகரிக்கப்பட்ட நிதியானது இன்று 27.05.2019ம் திகதி இரவு 09.00 மணியளவில் ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.பி.எம். ஹுஸைன் தலைமையில் சென்ற குழுவினரால் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.ரி. அமீஸ்டீன் மற்றும் வாழைச்சேனை தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர். இல்ஹாம் இஸ்மாயில் (MBBS) ஆகியோரின் முன்னிலையில் வைத்து அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா – கல்குடாக் கிளைப் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டிருந்தது.

ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் தங்களது அமைப்பு சார்ந்த விடயம் மட்டுமல்லாது பொதுநலன் சார்ந்த விடயங்களில் மிகவும் அக்கறையுடனும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதை கௌரவ தவிசாளர் மற்றும் ஜம்மிய்யதுல் உலமா கல்குடாக் கிளையின் பிரதிநிதிகளும் வெகுவாகப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சிறுவனுக்கு ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினால் சிகிச்சைக்கான நிதியுதவி

Posted in

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட கொடூர தற்கொலைக் குண்டுவெடிப்பில் பலத்த காயங்களுக்குள்ளான 10 வயதான அசாயல் றொசைறோ அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் குறித்த சிறுவனுக்கு மேலதிகமாகத் தேவைப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் மருந்துகளுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர் உடைந்து போயிருந்ததோடு விருப்பமுடைய கொடையாளர்களிடமிருந்து உதவிகளையும் கோரியிருந்தனர்.

மேற்படி சிறுவனின் மருத்துவச் செலவுகளுக்கு உதவும் வகையில் அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட்ட ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தம்மாளான ஒரு உதவித் தொகையினை அவசரமாக சேமித்திருந்தனர்.
அந்தவகையில் நேற்று 2019.05.24ம் திகதி மாலை குறித்த அமைப்பின் தலைவர் எம்.பி.எம். ஹுஸைன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பிலுள்ள குறித்த சிறுவனின் இல்லத்திற்குச் சென்ற ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் உதவித் தொகையாக சுமார் இருபத்தி ஐயாயிரம் ரூபா காசோலை மூலம் வழங்கி வைக்கப்பட்டது.

இதேபோன்று சமூக அமைப்புக்கள், தனவந்தர்கள் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி படுகாயமடைந்துள்ள குறித்த சிறுவனின் மருத்துவ செலவுகளுக்கு உதவிட முன் வர வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.





ஸ்ரீ.மு. காங்கிரஸின் இணைப்பாளராக எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் நியமனம்

Posted in
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதிக்கான இணைப்பாளராக CASTRO அமைப்பின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் அவர்கள் இன்று கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ். ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரையின் கீழும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரான எச்.எம்.எம். றியாழ் அவர்களின் சிபார்சின் பேரிலும் இந்நியமனம் தேசிய அமைப்பாளர் கௌரவ. சபீக் ரஜாப்டீன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களினால் இன்று 10.05.2019ம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரான எச்.எம்.எம். றியாழ் அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் முன்னெற்றமடைவதற்கு எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் அவர்களின் இவ்விணைப்பாளர் நியமனம் பெரிதும் வலுச் சேர்க்கும் என்பதோடு இளம் தலைமைத்துவங்களான இவ்விருவரும் கட்சியின் வளர்ச்சியில் ஒன்றிணைந்து செயலாற்றி இளைஞர்கள், மூத்த போராளிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து கல்குடாத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.