Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடி பிரதேச சபைத் தேர்தலும் எதிர்பார்ப்பில் ஏமாற்றமடையப் போகும் வேட்பாளர்களும்

Posted in
 - அரசியல் ஆய்வு -

விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் அதுவும் குறிப்பாக ஓட்டமாவடிப் பிரதேசத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை ஆகிய இரு பிரதேச சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ACMC), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), மஹிந்தவின் கூட்டு எதிர்கட்சி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி (PMGG), அலிசாஹிர் மௌலானாவின் சுயேட்சைக் குழு ஆகியவை களமிறங்கலாம் என்று பரவாலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிலும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் அதிக போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இடம்பெற்ற முஸ்லிம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலேயே பொதுவாகப் போட்டியிட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ தத்தமது சின்னங்களில் போட்டியிட முடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான உறுதியான ஆசனங்களாக 10உம் போனஸ் ஆசனங்களாக 6உம் காணப்படுகின்ற நிலையில் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால் ஒவ்வொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தி தலா 10 வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும். அவ்வாறெனின் மேற்படி UNP, SLMC, ACMC சார்பாக மொத்தம் 30 வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள்.

ஆனால் UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடவே பெரும்பாலும் உடன்பட்டிருப்பதால் மூன்று கட்சிகளையும் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலே தயாரிக்க முடியும். அவ்வாறு ஏற்படின் தனித்தனியாக கட்சிகள் போட்டியிடும்போது தனக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்த்திருந்த மேற்படி மூன்று கட்சிகளையும் சேர்ந்த சுமார் 20 பேரின் வேட்பாளர் கனவும் கலைவதோடு அவர்களது எதிர்பார்ப்புக்கு பாரிய ஏமாற்றமும் ஏற்படப் போகின்றது.

UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட அதிக சாதகங்கள் இருப்பதனை இக்கட்சிகளின் தலைமைகள் தங்களது அடுத்த மட்டத்திற்கு அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அந்தந்த கட்சிகள் சார்பாக யாருக்கு முன்னுரிமை கொடுத்து தலைமைத்துவம் தெரிவு செய்யப் போகின்றது என்று ஒரு சிக்கலான நிலை ஏற்படும். அவ்வாறு நடக்கும்போது வேட்பாளருக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாது ஏமாற்றமடைபவர்கள் தத்தம் கட்சி மீது அவநம்பிக்கை ஏற்பட்டு விரக்தி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுதவிர ஏற்கனவே சிலர் தாங்கள் தேர்தலில் இறங்கப் போவதாக பிரச்சாரம் செய்து வந்திருந்தமையும் ஆனால் தற்போது கூட்டணி அமையும் சந்தர்ப்பத்தில் குறித்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்பதும் தெளிவாகின்றது.

ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான தேர்தலில் UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட முன்வந்தால் இக்கூட்டணி சபையைக் கைப்பற்றுவதற்கான நூற்றுக்கு தொன்னூற்றைந்து வீத வாய்ப்புக்கள் உள்ளது. இவ்வாறு கூட்டணி அமைத்து சபைகளை கைப்பற்றுவதையே பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தனது பிரதான திட்டமாக வகுத்துள்ளது. அவ்வாறு ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான தேர்தலில் UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் கூட்டணியாகக் களமிறங்கினால் கூட்டணி சார்பாக வரும் 10 வேட்பாளர்களில் கட்சிகள் வாரியான ஒதுக்கீடாக SLMC – 04 வேட்பாளர்கள், ACMC - 03 வேட்பாளர்கள், UNP -03 வேட்பாளர்கள் உள்ளடங்கிய பட்டியலே தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

அவ்வாறு அமையுமிடத்து ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான தேர்தலில் UNP சார்பாக ஹனீபா (மம்மலி) ஜீஎஸ், புர்க்கான், சபீர் மௌலவி ஆகிய மூவரும், ACMC சார்பாக ஐ.ரி. அஸ்மி, கே.பி.எஸ். ஹமீட் (முன்னாள் தவிசாளர்),நௌபர் (முன்னாள் பிரதித் தவிசாளர்) ஆகிய மூவரும் SLMC சார்பாக விஜித அன்வர், முஹாஜிரின் ஆசிரியர், அன்வர் ஆசிரியர், மாஞ்சோலை கபீர் ஹாஜியார் ஆகிய நால்வரையும் அடக்கிய மொத்தம் 10 பேரைக் கொண்ட கூட்டணி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பெயர்ப் பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் பெண் வேட்பாளர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் இந்த மூன்று கட்சிகளின் கூட்டணியானது அமையும் பட்சத்தில் ஓட்டமாவடி பிரதேச சபையை இலகுவாகக் கைப்பற்றும் என்பதில் ஐயம் இல்லை.

இருந்தாலும் SLMC மற்றும் ACMC ஆகிய இரண்டு கட்சிகளும் கடந்த காலங்களில் பாம்பும் கீரியும் போன்று அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். இவ்வாறிருக்க கூட்டணியாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு ஒரே மேடையில் பிரச்சாரத்தினை ஒற்றுமையாக மேற்கொள்ளப் போகின்றார்கள், கடந்தகாலங்களில் ஆளாலுக்குக் கூறிய குற்றச்சாட்டுக்களை மறந்து எவ்வாறு பொது மேடையில் பேசி வாக்குக் கேட்கப் போகின்றார்கள்? அதனை வாக்களார்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்ற சுவாரசியமே எல்லாவற்றையும் மிஞ்சி நிற்கின்றது.

இக்கூட்டணி தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான (SLFP) வேட்பாளர் பட்டியல் சட்டத்தரணி மாஹிர் அவர்களின் தலைமையில் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. இந்தக் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஹாரூன் ஸஹ்வி அவர்கள் ஒரு பின்புலத்தைக் கொண்டு காணப்படுவதாலும் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கல்குடாத் தொகுதி, வாழைச்சேனை, ஓட்டமாவடிப் பிரதேசத்திற்கான அமைப்பாளர்கள் நமது ஓரைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வழிகாட்டல் இருக்கும் என்பதாலும் இத்தேர்தலில் SLFPஉம் தாக்கம் செலுத்தக் கூடிய கட்சியாக இருப்பதோடு எதிர்கட்சியாவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் உள்ளது.

இதுதவிர PMGGஉம் களமிறங்குவதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகின்றது. இதுதவிர ஹாபிஸ் நஸீர் அவர்களுடனான முரண்பாட்டின் பின்னர் மௌலானாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயட்சைக்குழு, கருணா அம்மானின் வழிகாட்டலில் கூட்டு எதிர்க்கட்சி ஒரு பெயரிலும் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவருகின்றது.

அத்தோடு UNP, SLMC, ACMC கூட்டணியில் வாய்ப்புக் கிடைக்காதவர்கள் SLFP, PMGG போன்ற கட்சிகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும்போது SLFP, PMGG கட்சிகள் வெற்றிபெறுகின்றனவோ இல்லையோ முன்னரைவிட புதிய வருகைகளினால் பலமடையும் என்பதும் உண்மை.

எவ்வாறாயினும் UNP, SLMC, ACMC கூட்டணி அமைந்தால் ஓட்டமாவடி பிரதேச சபையை இலகுவாகக் கைப்பற்றும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதோடு, அவ்வாறு கூட்டணி அமையும் சந்தர்ப்பத்தில் இம்மூன்று கட்சிகளையும் சேர்ந்த தங்களை வேட்பாளர்களாக நிறுத்துவார்கள் என்று பாரிய எதிர்பார்ப்புடன் இருந்த ஒரு தொகை தீவிர அரசியல் செயற்பாட்டாளர்கள் ஏமாற்றமடையப் போவதும் அரசியல் எதிரிகளுடன் எவ்வாறு ஒன்றிணைந்து கூட்டணியாக இத்தேர்தலில் செயலாற்ற முடியும் என்று கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஒரு குழப்பமான நிலைப்பாடு ஏற்படப் போவதும் தின்னம்.

-அபு முஜாஹித்-

© ODDAMAVADI NEWS

ரெயில்வே அத்தியவசிய சேவையாக அறிவிப்பு - இராணுவத்தினருக்கு ரெயில்வே துறையில் பயிற்சி

Posted in

தற்போது இடம்பெற்றுவரும் ரெயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ரெயில்வே சேவை நாட்டின் அத்தியவசிய சேவையாக இன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியாலளர் மாநாட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்தவகையில் வேலைக்கு உடனடியாகத் திரும்பாத ரெயில்வே சேவை ஊழியர்கள் பணியிலிருந்து தாமாக விலகிக் கொண்டதாகக் கருதப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். அத்தோடு ரெயில்வே பணிப் பகிஷ்கரிப்பினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் மறு அறிவித்தல் வரை தனியார் பேரூந்துகளை அதிவேக நெடுந்சாலைகளில் கட்டணமின்றி பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் ரெயில்வே சேவையில் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றால் அதனை சுமூகமாக்குவதற்காக இராணுவத்தினருக்கு ரெயில்வே சேவையின் அனைத்துத் துறைகளிலும் பயிற்சிகளை வழங்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

© ODDAMAVADI NEWS

மட்டக்களப்பில் சிக்கிய பாரிய தொகைப் பாம்புகள் அனர்த்தமொன்று ஏற்படுவதற்கான முன்னறிவித்தலா?

Posted in
மட்டக்களப்பு நாவலடி கடற்பிரதேசத்தில் மீனவர்களின் கரைவலைகளில் ஓரிரு தினங்களாக பெருமளவிலான பாம்புகள் சிக்கியுள்ளன. இதனால் மீனவர்களும் பொதுமக்களும் அதிகம் அச்சமடைந்துள்ளதோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை ஆராய்ந்து அனர்த்தங்கள் தொடர்பிலான அறிவித்தல்களை முன்கூட்டி அறிவிப்பதன் மூலம் தங்களை அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இடம்பெற்ற சுனாமி அனர்த்தம், மற்றும் 2011ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு ஆகியவை நிகழ்வதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு பாரியளவில் பாம்புகள் கரைவலைகளில் சிக்கிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி அனுபவங்களினாலும் தற்போது அதிக சீரற்ற காலநிலை நிலவி வருவதன் காரணமாகவும் அத்தோடு இந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையம் விரைவில் பூகம்பம் ஏற்படலாம் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளமையாலும் மக்கள் இவ்வாறு பாம்புகள் அதிகளவில் சிக்கியுள்ளமையானது ஒரு அனர்த்தத்திற்கான முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று பெரிதும் அச்சப்படுகின்றனர்.




© ODDAMAVADI NEWS

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்டப் போட்டியில் ஓட்டமாவடி எச்.எம்.எம். தஸீம் சாதனை.

Posted in

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 17.11.2017ம் திகதி கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது மட்-மம-ஓட்டமாவடி விஷேட தேவையுடையோர் பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 04 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். அதில் எச்.எம்.எம். தஸீம் என்ற மாணவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அத்தோடு பணப் பரிசாக பத்தாயிரம் ரூபாவையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.



அங்கவீனம் திறமையை வெளிக்காட்டுவதற்கு ஒரு தடையல்ல என்பதனை தனது தன்னம்பிக்கை மூலம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ள எச்.எம்.எம். தஸீம் அவர்கள் நிரூபித்துள்ளார். 

அந்தவகையில் எமது ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்த மாணவனான எச்.எம்.எம். தஸீம் அவர்களை எமது ODDAMAVADI NEWS சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மாணவன் சாதனை புரிய பல வழிகளிலும் ஊக்கங்களை அளித்த பாடசாலை சமூகம் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 































© ODDAMAVADI NEWS

சுனாமி வதந்தி - மக்கள் அச்சமடையத் தேவையில்லை

Posted in

இன்று காலை கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது பகுதிகளில் கடல் கொந்தளிப்பு மற்றும் ஒரு சில இடங்களில் கிணற்று நீர் மட்டம் குறைந்ததினால் மக்கள் பீதியடைந்து சுனாமி வரப்போகின்றதென்று பதற்றமடைந்திருந்தனர். இவ்வாறு நாட்டின் பல பகுதிகளுக்கும் வதந்தி பரவியிருந்தது. இருந்தாலும் அந்தச் செய்தி உண்மையில்லை என்பதனை இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம், இந்திய சுனாமி எச்சரிக்கை மையம், ஆசிய பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் என்பன ஊர்ஜிதம் செய்துள்ளன. அத்தோடு இலங்கைக்கு அண்மையில் எவ்வித நிலநடுக்கங்களும் பதிவாகவில்லை என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை என்பதோடு வதந்திகளைப் பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





©ODDAMAVADI NEWS

தேசிய ரீதியில் முதலிடம் பெற்று ஓட்டமாவடி மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவி - ஹனான் அமீன்

Posted in
ஓட்டமாவடியைச் சேர்ந்த பௌசுல் அமீன் (பாராளுமன்ற உத்தியோகத்தரின்) மகள் ஹனான் அமீன் எனும் பெயருடைய மாணவி முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மீலாத் விழா கட்டுரைப் போட்டியில் (தமிழ்மொழி) ஆரம்பப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று எமது ஓட்டமாவடி மண்ணுக்கும் எமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஓட்டமாவடி மக்கள் சார்பாக ODDAMAVADI NEWS ஆகிய நாம் இம்மாணவிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இன்னும் பல சாதனைகளைப் புரியப் போதுமான ஆற்றல்களை இறைவன் வழங்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றோம்.
 இந்த மாணவி கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியில் தற்போது தரம்-5இல் கல்விகற்று வருகின்றார். கிழக்கு மாகாணத்தைப் போன்று சிறந்த மேலதிக கற்கை வசதிகள் கிடைக்காத போதிலும் இவ்வாறானதொரு சாதனையை மாணவி ஹனான் அமீன் படைத்துள்ளமை உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அத்தோடு இந்த மாணவியின் தந்தை பௌசுல் அமீன் அவர்கள் எமது ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதோடு அவரும் இந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பாராளுமன்ற சேவை உத்தியொகத்தராகக் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

பிறந்த மண்ணிலிருந்து தொழில் நிமித்தம் இடம்பெயர்ந்து தலைநகருக்குச் சென்றிருந்தாலும் ஓட்டமாவடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது மகள் சாதனை படைக்குமளவுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த பௌசுல் அமீன் மற்றும் அவரது துணைவியாரையும் பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.

தேசிய ரீதியில் வெற்றிபெற்றவர்களுக்கான மாபெரும் பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் இறுதிக்குள் நடத்தப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. 

மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றமைக்கான மாணவி ஹனான் அமீன் பெற்ற பரிசில்கள் -


©ODDAMAVADI NEWS

வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்க எம்முடன் கைகோருங்கள்

Posted in

வறுமைக்கோட்டின்கீழ் தனது கல்வியைத் தொடரும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை எமது கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் ஆரம்பித்துள்ளோம்.


வருடந்தோறும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை எமது நிறுவனத்தினால் வழங்கி வருவதனை நீங்கள் அறிந்ததே அதேபோன்று இவ்வருடமும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.


இக்கல்வி பணியில் நீங்களும் இணைந்துகொள்ள விரும்பினால் இம்மாணவச் செல்வங்களுக்கு பணமாகவோ, பொருளாகவோ உங்கள் உதவிகளை வழங்கி வைக்கலாம்.

நன்றி


தொடர்புகளுக்கு

Haither Ali - 077 3681209
Rasee Mohammed - 075 6963842
Mohammed Thifas - 075 0574005


https://www.facebook.com/Kalkudah-Cultural-Development-Association-1400066613540275/?ref=bookmarks

"மனிதமரம்" M.U.M. சனூஸ் அவர்களுடனான நேர்காணல் (வீடியோ)

Posted in
"மனிதமரம்" குறுந்திரைப்படம் நேற்று 05.11.2017ம் திகதி மாலை 05.15 மணியளவில் ஒட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டது. 

ஒரு சர்வதேச குறுந்திரைப்படத்தை ஒத்ததாக எம்மவர்களால் எடுக்கப்பட்ட இக்குறுந்திரைப்படத்தின் காட்சிகள் அனைவரையும் பிரம்மிப்புக்குட்படுத்தியதோடு பாராட்டுதல்களையும் பெற்று வருகின்றது. 

இதன் இயக்குனர் M.U.M. சனூஸ் அவர்கள் எமது ODDAMAVADI NEWS வலைத்தளத்திற்கு பிரத்தியேக செவ்வியினை வழங்கியிருந்தார். அதன் காணோளி இங்கே உங்களுக்காகப் பதிவேற்றப்பட்டுள்ளது.







திரை விமர்சனம் விரைவில் வெளிவரவிருக்கின்றது.

நன்றி  - ADAM RIZWIN & SAMEEM

©ODDAMAVADI NEWS

SLM. ஹனீபா அவர்கள் IBC தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

Posted in
உலகறிந்த தமிழ் இலக்கியவாதியும்
இலங்கை கிழக்கு மாகாணத்தின் இலக்கிய அடையாளமுமாகிய ஓட்டமாவடி SLM. ஹனீபா அவர்கள் இலங்கை தமிழ், முஸ்லிம்களின் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான தனது பிரத்தியேகப் பேட்டியை  IBC தொலைக்காட்சி சேவைக்கு அண்மையில் வழங்கியிருந்தார்கள்.

அதன்போது பல நிதர்சனமான உண்மைகளை வெளிப்படையாக  SLM. ஹனீபா அவர்கள் முன்வைத்திருந்தார்கள். அதன் யூடியூப் லிங் கீழே தரப்பட்டுள்ளது. அதனைச் சொடுக்கி குறித்த பேட்டியைக் கண்டுகளிக்கலாம்.



©ODDAMAVADI NEWS

"மனிதமரம்" குறுந்திரைப்படம் - நம்மவர்களின் படைப்பை ஊக்குவிப்போம்.

Posted in
MS Studio தயாரிப்பில் உருவாகியுள்ள மனிதமரம் குறுந் திரைப்படத்தின் மக்கள் காட்சி நாளை 05.11.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதற்கு அன்பளிப்பாக ரூபா. 100 எதிர்பார்க்கப்படுகின்றது. 

முற்றிலும் எமது இளைஞர்களின் படைப்பாற்றலில் உருவாகியுள்ள இந்தக் குறுந் திரைப்படத்தின் மக்கள் காட்சியை நாம் அனைவரும் சென்று பார்வையிட்டு அவர்களின் திறமையை ஊக்கப்படுத்தி இந்தத் துறையில் அவர்கள் சாதித்திட நாமும் பங்காளிகளாவோம். 

மனிதமரம் குறுந்திரைப்பட விமர்சனம் எமது தளத்தில் விரைவில் பதிவிடப்படும். 

©ODDAMAVADI NEWS


மனோ கணேசன் ஐயா, உங்களை வாழ்த்துகின்றேன்... எம்.ரீ.ஹைதர் அலி

Posted in
அமைச்சர் கௌரவ மனோ கணேசன் ஐயா அவர்களே

உங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் என்றும் குரல் கொடுக்கும் நீங்கள் என்றும் சரித்திரம் படைப்பீர். உங்களைப் போன்ற சமூகத்தின் தலைவர்களுக்கு நான் வாழ்த்துச்சொல்வதில் பெருமையடைகின்றேன்.

தனி மனிதனாய் உங்கள் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பெரும்பான்மைச் சமூகத்தைக் கொண்டு ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களிடம் சரிக்குச் சமமாக நின்று, குரல் கொடுக்கும் உங்கள் துணிவு ஏனைய சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளிடமும் வர வேண்டும். அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டு, அமைச்சுக்களை வகித்தாலும், என் சமூகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று தான் வகிக்கும் அமைச்சினைத் துச்சமென நினைக்கும் நீங்கள் என்றும் உங்கள் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

உங்கள் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தலைமை நீங்கள். ஆனால், எங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லும் சத்தியமும், தேசியமும் எங்கே...? உங்கள் குரல் உங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காக அரசாங்கத்தினை எதிர்த்துப் பேசுகின்றது. ஆனால், எங்கள் சமூகத்தின் உரிமைகளை அதே அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வாயடைத்துப்போகும் எங்கள் தலைமைகள். உங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காக தான் வகிக்கும் அமைச்சினைத் துட்சமென நினைத்து தூக்கியெறிய நினைப்பவர் நீங்கள். ஆனால், எங்கள் சமூகங்களைக் காண்பித்து அமைச்சுக்களைப் பெற்றுக்கொள்பவர்கள் எங்கள் தலைமகள். சமூகத்தின் உரிமைகளுக்காக மக்களை பின் தள்ளி விட்டு முன் நிற்கின்றீர்கள் நீங்கள். ஆனால், எங்கள் தலைமைகளோ சமூகத்தின் உரிமைகளுக்காக மக்களை முன் தள்ளி விட்டு பின் நிற்கின்றார்கள்.

வாழைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களிலுள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உங்களைப் போன்று தைரியமாக ஒரு பிரதேசத்திற்குமாவது பிரதேச சபையினைப் பெற்றுத்தர முடியாத தலைமைகளே எங்கள் சத்தியமும், தேசியமும். இன்று ஒரு உள்ளூராட்சி சபையையேனும் பெற்றுக்கொள்ள முடியாத முஸ்லிம் தலைமைத்துவங்களுக்கு உங்களின் வீரமுள்ள செயற்பாடு நல்லதொரு பாடமும் படிப்பினையுமாகும். எம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுத்தருவார்கள் என்று எமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு, நாங்களே எமது உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியதே.

ஆனால், ஆர்ப்பாட்டமில்லாமல் உங்கள் ஆளுமையினால் இன்று வெற்றி பெற்றுள்ளீர்கள் உங்கள் பயணத்தில் நீங்கள் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

எம்.ரீ. ஹைதர் அலி
மீராவோடை.