Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடியில் பெண்களுக்கான இலவச இலகு ஆங்கிலப் பேச்சுக் கருத்தரங்கு

Posted in

பிரதேச சமூக வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாகும் - ஏ.எம் ஹனீபா

Posted in
தங்களது பிரதேசம், தான் சார்ந்த கிராமம், தனது சமூகம் விருத்தியடைய வேண்டும், அந்த வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை வழங்க முன் வருவது இளைஞர் சமூகமாகிய உங்களின் கட்டாய கடமையாகும் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட தகவல் பிரிவு உத்தியோகத்தர் ஜனாப் ஏ.எம் ஹனீபா தெரிவித்தார். 

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இளைஞர்கழகங்களின் பிரதேச சம்மேளனக் கூட்டம் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 2019.02.19 ஆம் திகதி, சம்மேளனத் தலைவர் திரு . வினோத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன்றைய இளைஞர் சமுதாயம் தான் சார்ந்த சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்ய முன் வரவேண்டும் அவ்வாறு சேவை செய்ய முன் வருதற்கு முதல் சமூகம், சமுதாயம் என்ற எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்ள வேண்டும். சமூகம் அல்லது Society எனும் போது ஒட்டு மொத்த சமுதாய குழுக்களையும் உள்ளடக்கியதுதான் சமூகம் . இங்கு சிறு சிறு குழுக்களாகவே சமூதாய அமைப்புக்கள் கானப்படுகின்றன. 

சமூகம் என்ற வகையில் தங்களுக்குள் உள்ளடங்கப்பட்டு இருக்கும் சமுதாய அமைப்புக்களை பாதுகாப்பது, அவர்களுக்காக பணி செய்வது சமூகத்தின் தார் மீக பொருப்பாக இருக்க வேண்டும். ஒரு சமுதாயக் குழு பிழை விடுகின்றது என்பதற்காக ஒட்டு மொத்த சமூகமும் தவறு செய்கின்றது என்று கூறிவிட முடியாது. அவ்வாறு தவறுகள், பிழைகள் நடைபெருகின்றது என்பதை அவதானித்தாலோ அல்லது அறிந்தாலோ அந்த சமூகத்தில் இருக்கும் ஏனைய சமூதாயக் குழுக்கள் அதனை ஒழுங்குபடுத்த வேண்டும், அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். வெறும் பார்வையாளராகவும், செயற்பாடற்றவராகவும் இருந்து விட்டு நாங்கள்தான் களத்தில் நின்றோம் எங்களுக்கு தெரியும் இப்படித்தான் இதன் முடிவு வரும் என்று பெயர் போட நனைப்பது ஒரு கோழைத்தனமான செயற்பாடாகவே இருக்கும். 

எனவே இன்றைய இளைஞர் சமுதாயம் வாய்ப்பு வரும் வரை பார்த்திராது வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு முன்னேற முயற்சிக்க வேண்டும் பிரச்சனைகள் தவறுகள் முறன்பாடுகள் உருவாகும் போது சமய நெறிமுறைகளுடனும் ஒழுக்கத்துடனும் கையாள பழக வேண்டும். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்த நாட்டின் பல்கிப் பெருகியுள்ள இளைஞர் தேவைகளுக்கு சேவை செய்யும் ஒரு அரச நிறுவனம். அதனைப்பயன்படுத்தி இன்று மாவட்டத்தின் அனைத்து அரச,தனியார் துறைகளில் இருக்கும் உத்தியோகத்தர்களும் அதன் ஆரம்ப கால அங்கத்தவர்களாக இருந்தவர்கள்தான். உங்களது பிரதேச கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் யோகஸ்வரன் ஐயா ஒரு இளைஞர் சேவை உத்தியோகத்தராக கடமையாற்றிவர்தான். இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பனிப்பாளர் திரு. சிவநேசராச அவர்களும்,பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திரு . சபியதாஸ் முன்னால் சம்மேளனத் தலைவர் திரு சசி, இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்கள் என பலர் பங்கேற்றனர்.


வாராந்த சந்தையை முடக்க ஹர்த்தாலா???

Posted in
 புத்திஜீவிகளே....! பள்ளி நிர்வாகிகளே.,,! அரசியல் தலைமைகளே.....!
பல்லாண்டுகளாக மூடப்பட்டிருந்த எமது மீராவோடை சந்தை எமது பிரதேசத்தில் அன்றாடம் தினக்கூலி செய்து ஜீவனோபாயம் நடாத்தி வரும் அடி மட்ட மக்கள் பயனடையும் வகையில் 2018 ஆண்டு மீராவோடை பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் மீராவோடை மக்களால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு வாராந்தம் இடம்பெற்று வரும் குறித்த சந்தையை மீண்டும் மூட முயற்சிப்பதும், சந்தையை மூடி மீராவோடைப் பிரதேசத்தை முப்பது வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வைக்க எத்தனிப்பதும் கடும் கவலைக்குரிய விடையமாகும். சுமார் 30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சந்தை 2018 ஆண்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை சகலரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியதுடன், மீராவோடை புத்தெழுச்சி பெறத்தொடங்கிய விட்டதாக மக்கள் மனதில் எண்ணம் தோன்றியது. குறித்த சந்தையில் ஒரு சில கடைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு மீராவோடை சந்தையை நடாத்திச் செல்வதென்பது மக்களுக்கு எந்தவித பயனையும் அளிக்கப்போவதில்லை. இங்கு வாராந்த சந்தையே சாத்தியமென்பது நிரூபணமாகியுள்ளது. இப்போது அழகான முறையில் பொது மக்கள் குறித்த சந்தைக்குச்சென்று முதியோர்கள், பெண்கள் அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்கின்றனர். இங்கே எந்த அனாச்சாரங்களும் இதுவரை இடம்பெற்றதாக தெரியவில்லை. அப்படியிருக்கையில் இப்பிரதேசத்தின் பிரதான பள்ளிவாயலின் தலைவர் ஒரு விபசாரம் நடக்கும் இடமாகவும் சித்தரிக்கப்பட்டதை என்னவென்று சொல்வது. பொறுப்புவாய்ந்த ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை இல்லாமலாக்குகின்ற முயற்சியில் ஒரு சிலர் இறங்கிச்செயற்பட முனைகின்ற அதே வேளை, மீராவோடை சந்தையி இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் அயலிலுள்ள தமிழ் கிராமத்தில் இவ்வாறான வாராந்த சந்தையொன்றை திறக்கும் முயற்சியை முன்னெடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. இவ்வாறு மீராவோடை வாராந்த சந்தையை மூடி எமது சகோதரர்களுக்கும் எமது பிரதேசத்திற்கும் வரலாற்று துரோகமொன்றை செய்து விடாதீர்கள். இது போன்றதொரு சந்தையை அவர்கள் உருவாக்கினால் எமது வியாபாரிகளின் நிலைமை என்னவென்பதை சற்று சிந்தியுங்கள். கடந்த காலங்களில் நாம் எதிர்நோக்கிய சிக்கல்களை சற்று யோசியுங்கள். இதன் பாரதூரங்களை நாமனைவரும் புரிந்து கொள்வது அவசியம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களை நாமே மற்றவர்களுக்கு வழங்கி விடுகின்றோம். கடந்த காலங்களில் நாம் பட்ட, சந்தித்த கசப்பான அனுபவங்களை நினைத்துப் பாருங்கள். வாழைச்சேனைப்பொலிஸ் சந்தி ஆட்டோ தரிப்பிடப்பிரச்சினை யாரும் மறக்கவில்லை. அதைப்போன்று மீராவோடை வாராந்த சந்தை மூடப்பட்டு எங்களை விட்டும் கை நழுவிச்சென்றால், நஷ்டவாளிகள் நாம் எல்லோருமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனை மீட்டுத்தர எந்த அரசியல்வாதிகளும் வரமாட்டார்கள் என்பது நாம் கண்ட அனுபவம். குறித்த பிரச்சினைக்கும் தீர்வு காணும் சந்தர்ப்பம் இன்னும் கைநழுவிப் போகவில்லை. பள்ளிவாயல் நிர்வாகிகளே ........ புத்திஜீவிகளே .............. எமது ஊர் அரசியல்வாதிகளே இது விடயத்தில் தலையிட்டு எவரும் பாதிக்கப்படாத தீர்வுகளைப்பெற்றுக் கொடுக்க முன்வாருங்கள். நாம் எல்லோரும் சகோதரர்கள், உறவுகள், நானா, தம்பிகள், குடும்ப உறவுகள். என்றும் எமது உறவுகள் தொடர வேண்டும் எனும் வேண்டுதலோடு....

அஸ்கர் அலி ,,.......................
கோறளைப்பற்று மத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 
வாழைச்சேனை

மீராவோடை வாராந்த சந்தையை எதிர்த்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் ஆதரவளிக்க வேண்டாம்

Posted in
மீராவோடை வாராந்த சந்தையை எதிர்த்து இன்று 18.02.2019ம் திகதி காலை அடையாளந் தெரியாத ஓட்டமாவடி பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எனும் பெயரில் ஹர்த்தாலுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமைக்கு யாரும் ஆதரவளிக்க வேண்டாம் என்று ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் முஹம்மட் ஹில்மி அவர்கள் வெளிநாட்டிலிருந்து எமது ஓட்டமாவடி செய்திச் சேவைக்கு அனுப்பியுள்ள பிரத்தியேகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் தனது அறிக்கையில் “இது ஒட்டமாவடியிலுள்ள ஒரு சில வர்த்தகர்களின் இயலாமையை எடுத்துக் காட்டுவதோடு ஒரு வாராந்த சந்தையினால் ஓட்டமாவடி பஸாரின் வியாபாரம் நஷ்டமடைகின்றதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கு பொதுமக்கள் இலாபத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடிந்துள்ளதை இன்னும் பல்வேறு வழிகளில் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர அதனை தடைசெய்வதற்கும் நமக்கு நாமே ஹர்த்தால் போட்டுக் கொள்வதற்கும் முன்வருவதானது மற்றவர்களுக்கு ஒரு பிழையான முன்னுதாரணமாக அமைந்து விடும். மீராவோடை வாராந்த சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் வருவதால் பெருந்தொகைப் பணம் வெளியில் செல்கின்றது என்ற கருத்தானது நகைப்புக்குரியதாகும். அவ்வாறெனின் இதே மாதிரி வெளியூர் வியாபாரிகள் வாராந்த சந்தைக்கு வரக்கூடாது எங்களின் பணம் முஸ்லிம் ஊர்களுக்குச் செல்கிறது என்று தமிழ்ப் பிரதேசத்திலுள்ளவர்கள் முடிவெடுத்தால் என்ன செய்வது. அது மாத்திரமன்றி ஓட்டமாவடி பஸாரிலுள்ள வியாபாரிகள் உள்ளூரில் மாத்திரமா தங்களது கொள்வனவை மேற்கொள்கிறார்கள். அவர்களும் காத்தான்குடி கொழும்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்றே கொள்வனவை மேற்கொள்கிறார்கள். இதனால் மட்டும் வெளியூருக்குப் பணம் செல்லவில்லையா?.  உள்ளூர் மக்களில் 99 வீதமானோர் நன்மையடையும் வாராந்த சந்தையை நிறுத்த முயற்சிப்பதானது மக்களின் நலனை விட வியாபாரிகளின் நலனை முன்னிலைப்படுத்துவதனையே காண முடிகின்றது” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் தனது குறிப்பில் “இந்த வாராந்த சந்தையை நிறுத்தினால் மீராவோடை எல்லையிலுள்ள தமிழ்ப் பிரதேசத்தில் இதே வாராந்த சந்தையை ஆரம்பித்தால் யாரும் யாரையும் நிறுத்த முடியாது போய்விடும். வாராந்த சந்தையை நாளாந்த சந்தையாக மாற்றினாலும் அந்த சந்தை வலுவிழந்துவிடும்” என்றும் தெரிவித்தார். 

மேலும் இந்த ஊரில் அரசியல் பிரதிநிதியாக ஒரு இராஜாங்க அமைச்சர் இருந்தும் இவ்வாறான உள்வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வராமலிருப்பதானது அவரது வாக்கு வங்கிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்திலிருக்கிறார் என்பதனையே வெளிக்காட்டுகின்றது. உண்மையில் பாதிப்படைந்துள்ள ஒரு சில வியாபாரிகளைக் கூப்பிட்டு அதற்கான தீர்வை வழங்க வேண்டுமே தவிர நமக்கு நாமே ஹர்த்தால் போட்டுக் கொள்வது அடிமுட்டாள்தனத்தையே எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு சிலரின் சுயநல விளையாட்டு அன்றி ஒட்டுமொத்த ஓட்டமாவடி மக்களின் நிலைப்பாடு அல்ல. இதனால் இரு தரப்பினரும் ஊர்வாதம் பேசி முரண்பட்டுக் கொள்ளாமல் தெளிவாக இருக்க வேண்டும். பொது வெளியில் தெரிவிக்கும் கருத்துக்களை நன்கு பரிசீலனை செய்து வெளியிட வேண்டும். ஓட்டமாவடி வர்த்தக சங்கம் மௌனமாக இருப்பதானது அவர்களும் ஹர்த்தாலுக்கு மறைமுகமான உடந்தையாக இருப்பதையே காட்டுகின்றது. வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் ஓட்டமாவடி வியாபாரிகளே நன்கொடைகள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அவரவர் விருப்பம். தர்மம் செய்வதனை வற்புறுத்தலில் செய்ய வைக்க முடியாது. தர்மம் செய்தால் நன்மை கிடைக்கும். செய்யாவிட்டால் அவர்களுக்கு நன்மை கிடைக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்குடா பிரதேச அமைப்பாளர்கள் நியமனம்

Posted in
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்குடா பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பிரிவுகளுக்கான அமைப்பாளர்கள் நியமனம் இன்று 16.02.2019ம் திகதி மாலை 05.00 மணியளவில் மீராவோடை எல்லை வீதியிலுள்ள அந்நூர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.எம். சிம்சான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் விவகாரங்களுக்கான தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனூஸ் அவர்களும், விசேட அதிதியாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகத்தர் றிழா அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஜனாப். சுகைப் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் றஹீம் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இந்நிகழ்வின்போது கல்குடாத் தொகுதிக்குட்பட்ட கோறைப்பற்று மேற்கு மற்றும் கோறளை மத்தி பிரதேசங்களிலுள்ள பிரிவுகளுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் விவகாரங்களுக்கான தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனூஸ் அவர்களினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இதன்போது அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






















வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் அபிவிருத்திக் குழுவினரின் முயற்சியினால் மகப்பேற்று விடுதி மற்றும் பல் சிகிச்சை நிலையம் தொடராக இயங்க நடவடிக்கை

Posted in
எம்.ரீ. ஹைதர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் முன்வைத்த பல கோரிக்கைகளில் ஒன்றான மகப்பேற்று விடுதியை (Maternity ward) இயங்கச் செய்வதற்கு குடும்பநல உத்தியோகத்தரின் (Midwife) பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்ததற்கமைவாக குடும்பநல உத்தியோகத்தர் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில், அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின்போது மகப்பேற்று/பிரசவ விடுதி (Maternity ward) மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு 24 மணித்தியாலங்களும் இயங்குவதனையும் மற்றும் பல் சிகிச்சை நிலையம் (Dental clinic center) ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய திங்கள் தொடக்கம் சனி வரையான ஆறு நாட்களில் தொடராக இயங்குவது தொடர்பான தகவலையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் அறிவித்தல்களை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் இவ்வைத்தியசாலை ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளில் வீழ்ச்சியில் காணப்பட்டபோதிலும், வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் தற்போதுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோரின் தொடர் முயற்சிகளினாலும், பல்வேறுபட்ட உயர் மட்டத்திலான சந்திப்புக்களின் மூலமாகவும் பல முன்னேற்றங்களை இவ்வைத்தியசாலை இப்போது கண்டு வருகின்றது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் மகப்பேற்று விடுதியானது இனிவரும் நாட்களில் 24 மணித்தியாலங்களும் பொதுமக்களின் நன்மைகருதி செயற்படும், என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும், வைத்தியசாலையில் காணப்படும் பல் சிகிச்சை நிலையமும் திங்கள் தொடக்கம் வெள்ளி வரையான நாட்களில் பொதுமக்களுக்கும் சனிக்கிழமை நாளில் பாடசாலை மாணவர்களுக்கும் செயற்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பொதுமக்களுக்கான சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் மீராவோடை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு ஆகியோரின் தொடர் முயற்சிகளினால் இவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே, பொதுமக்கள் இனிவரும் நாட்களில் மேற்குறிப்பிட்ட சேவைகளை இவ்வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இரு இராஜாங்க அமைச்சர்கள் கல்குடா முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

Posted in
கல்குடாத் தொகுதி முஸ்லிம்களின் சமகாலத்தில் மிக முக்கிய பிரச்சினைகளாக இரு விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
1. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதீகவளக் குறைபாடுகள் மற்றும் வைத்தியசாலையைத் தரமுயர்த்தல். 
2.  முஸ்லிம்களுக்கு தனியான கோறளைமத்தி பிரதேச சபை.

இவ்விரு விடயங்கள் தொடர்பாகவும் எம்.ஜே.எம். அன்வர் நௌசாத் அவர்களினால் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும், கௌரவ சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் பைஷல் காசீம் அவர்களுக்கும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 

அந்தவகையில் மேற்படி விடயங்கள் இரண்டினையும் உடனடியாகத் தீர்ப்பதற்கு சகல மட்டங்களுடனும் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமென இரு இராஜாங்க அமைச்சர்களும் உறுதியளித்துள்ளனர். 

இது தொடர்பாக மேலும் நாம் எம்.ஜே.எம். அன்வர் நௌசாத் அவர்களிடம் வினவியபோது ”வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளின் குறைபாடுகள் மற்றும் நெருக்கடி நிலைகள் பற்றி மிகவும் கவலையுடன் வைத்தியர்கள் தங்களது கோரிக்கையினை ஊடகங்கள் வாயிலாக முன்வைத்திருந்தும், அதுபோல முஸ்லிம்களுக்கான தனியான கோறளை மத்தி பிரதேச சபையின் அவசியத்தை பல புத்திஜீவிகள் வலியுறுத்தி இருந்தபோதும் அவை எது தொடர்பாகவும் எள்ளளவு கூட இந்தப் பிரதேசத்தின் அரசியல்வாதியோ அல்லது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அமைப்பாளர்களோ கவனம் எடுக்காமையானது அவர்களது வங்குரோத்து நிலையினை எடுத்துக் காட்டுவதோடு, அரசியல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டுவிட்டு ஏனைய நாட்களில் மக்களின் கோரிக்கையை உதாசீனம் செய்வதும் வழமையாகியுள்ளது.” என்றும் தெரிவித்தார்.


அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கமைவாக அஷ்ஷேக். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு ஆளுநர் வைத்தியசாலைக்கு விஜயம்

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-

அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின், பணிப்பாளரும், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருமான அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களுக்கும் மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று 2019.02.10ஆம் திகதி - ஞாயிற்றுக்கிழமை அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தில் இடம்பெற்றது.


இச்சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை மீராவோடை வைத்தியசாலைக்கு அழைத்து வந்து இங்கு காணப்படும், ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறும், அதற்கான நேர, காலம் ஒன்றினை ஒதுக்கி ஆளுநரை அழைத்து வருமாறும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இச்சந்திப்பில், கருத்து தெரிவித்த அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் எமது பிரதேசத்தில் காணப்படும், வாழைச்சேனை மற்றும் மீராவோடை வைத்தியசாலைகளுக்கு எனது அழைப்பினையேற்று மிக விரைவில் ஆளுநர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

வைத்தியசாலைகளுக்கான, ஆளுநரின் விஜயத்தின்போது, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரையும் அழைத்துவருவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

அச்சந்திப்பில் மீராவோடை வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகள் அனைத்தினையும் கேட்டறிந்துகொண்டு இயன்றளவு முடியுமான தீர்வினை பெற்றுத்தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அபிவிருத்திக் குழுவினரால் வைத்தியசாலைக்கு ஆளுநரை அழைத்து வருவதற்கான கோரிக்கை அடங்கிய கடிதமும் கையளிக்கப்பட்டது.

மீராவோடை வைத்தியசாலைக்கு மருந்தாளர் (Pharmacist) நியமனம் - கிழக்கு ஆளுநருக்கு வைத்திய அத்தியட்சகர் மற்றும் அபிவிருத்திக் குழுவினர் நன்றி தெரிவிப்பு

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-
மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் மீராவோடை வைத்தியசாலைக்கு மருந்தாளர் (Pharmacist) ஒருவர் 2019.02.11ஆம்திகதி - திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.


வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளையேற்று இந்நியமனத்தினை வழங்கியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஊர் மக்கள் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மீராவோடை வைத்தியசாலையில் நாளாந்தம் சுமார் 250க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளர் பிரிவிலும், ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் நாளாந்தம் பற்சிகிச்சை கிளினிக் இடம்பெறுவதுடன், மாதத்தில் 8 தினங்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு ஆஸ்த்மா, தொற்றா நோய் போன்ற நோய்களுக்கான கிளினிக் நடைபெறுகின்றன. இதற்காக சுமார் 1400க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இவ்வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்குமுரிய மருந்து, மாத்திரை வகைகளை வழங்குவதற்கு மருந்தாளர் ஒருவர் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய தேவைப்பாடும், குறிப்பாக வயோதிப நோயாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.

சில சந்தர்ப்பங்களில் இங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் நோயாளிகளை பார்வையிட்ட பின்னர் வைத்தியர்களே மருந்தாளருக்கான கடமையினையும் மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை வழங்கும் சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றும் வந்துள்ளன.

இவ்வாறு பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளை ஏற்று இந்நியமனத்தினை பெற்றுத்தந்தமைக்காக ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன், இவ்வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளில் கவனம் செலுத்தி வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அனைத்திற்கும் இன்றுவரை உதவி புரிந்து வரும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினையும் பாராட்டுக்களையும் எமது பிரதேச மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.