Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடி.03 ஹிஜ்ரா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா? நடந்தது என்ன? (அதிபரின் பதில்).

Posted in
ஓட்டமாவடி.03 ஹிஜ்ரா வித்தியாலய அதிபரும் ஆசிரியர்களும் யானைச் சின்னத்திற்கான தேர்தல் பிரச்சாரங்களில் குழுவாக ஈடுபட்டு வருவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து தேர்தல்கள் திணைக்களத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. அதேவேளை சமூகவலைத்தளங்களில் அண்மைய நாட்களில் இவ்விடயம் பிரதான பேசுபொருளாகவும் மாறி விமர்சனத்திற்குட்பட்டிருந்தது. ஒருதரப்பு விமர்சனம் மாத்திரம் தற்போதுவரை வந்துகொண்டிருக்கும் நிலையில் விமர்சனத்திற்குட்பட்டுள்ள தரப்பினரின் பதில் வெளியாகியிருக்கவில்லை. அந்தவகையில் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் பாடசாலை நிருவாகத்திற்கும் உள்ளது

ஆகவே இவ்விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினரை அணுகி உண்மையாக நடந்த விடயங்களை பொதுத்தளத்தில் வெளியிடும் நோக்கில் © ODDAMAVADI NEWS ஆகிய நாம் பாடசாலை அதிபரைச் சந்தித்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டிருந்தோம். அவர்கள் வழங்கிய பதில்கள் இங்கே எவ்வித மாற்றமுமின்றி அவர்களின் நேரடிக் கருத்தாக பதிவிடப்படுகின்றது.

கடந்த 2018.01.26ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாடசாலை முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் பாடசாலை நேரத்தில் பென்சிலால் குத்தப்பட்டு காயமடைந்த மாணவனை அவரது வீட்டிற்குச் சென்று நலம் விசாரிப்பதென்றும் செல்லும் வழியில் மௌலவி ஹாரூன் சஹ்வி அவர்களைச் சந்தித்து பாடசாலைக் காணிக் கொள்வனவு சம்மந்தமாகக் கலந்தாலோசிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டதற்கமைவாக அதிபரும் 05 ஆசிரியைகளும் 02 ஆசிரியர்களும் உள்ளடங்கிய 08 பேர் கொண்ட குழுவொன்று மு.. 11.10 அளவில் வெளியேறிச் சென்று ஹாரூன் ஸஹ்வி அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தனர். அங்கு சென்றடைந்த சிறிது நேரத்தில் பாடசாலையிலிருந்து பணியாளர் ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பாடசாலைக்கு அதிகாரிகள் வந்திருப்பதாகவும் அதிபர்ஆசிரியர்கள் எங்கே என்று கேட்டதற்கு விடயத்தைக் கூறியதாகவும் வெளியே சென்ற குழுவினரிடம் தெரிவித்திருந்தார். அப்போது வெளியே சென்ற பாடசாலை முகாமைத்துவக் குழு உடனடியாகப் பாடசாலைக்குத் திரும்பியிருந்தது. ஆனால் அப்போது வருகை தந்திருந்த அதிகாரிகள் பாடசாலையில் அதுவரை தரித்திருந்திருக்கவில்லை. அதன்பின்னர் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வந்து தங்களுக்கு தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதன்படி விசாரிக்க வந்துள்ளதாகவும் கூறி அதிபரினது வாக்குமூலத்தைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பாக அது உண்மையா? அல்லது பொய்யா? என்று நிரூபிக்கப்படாத நிலையில் பாடசாலைக்கும் அதன் முகாமைத்துவத்திற்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையிலும் பெற்றோர்களை திசைதிருப்பும் வகையிலும் பேஸ்புக் தளத்தில் கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளமை இப்பாடசாலையை நேசிக்கும் அனைவர் மனதிலும் அதிக வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பதிவில் அதிபரும் ஆசிரியர்களும் மயில்க் கட்சியின் வெற்றிக்காக வீடு வீடாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு மானிய அட்டைகளை வழங்குகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியே சென்றிருந்த அதிபரும் உள்ளடங்கலான 08 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரின் சகோதரியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சரின் செயலாளரின் மனைவியும், ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரின் மனைவியின் சகோதரியும், பொலிஸ் அதிகாரியொருவரின் மனைவியும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறிருக்க எப்படி வெவ்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு மாத்திரம் பிரச்சாரத்தில் ஈடுபட முடியும்?

அல்லது அதிபரும் ஆசிரியர்களும் ஏதாவது ஒரு கட்சியின் சின்னத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய துண்டுப் பிரசுரங்களை அல்லது அட்டைகளை வழங்கிய போது எடுத்த வீடியோ ஆதாரமோ இக்குழு யாருக்காவது வாக்களிக்கச் சொல்லும் போது எடுத்த வீடியோ ஆதாரங்களை வைத்தோ நிரூபிக்க முடியுமா?

அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு வாக்களிக்கச் சொல்லி ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஹாரூன் ஸஹ்வி அவர்களின் வீட்டிற்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட முடியுமா?

மானியம் வழங்குவதானது பிரதேச செயலகத்தின் வேலை. அதை எப்படி ஒரு பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களும் மேற்கொள்ள முடியும்? அதிபர் அடங்கலான 08 பேர் கொண்ட குழு ஹாரூன் ஸஹ்வி அவர்களின் வீட்டுக்கு மாத்திரமே அன்றைய தினம் சென்றிருந்தவேளையே சம்பவம் நடைபெற்று காயமடைந்த மாணவனைப் பார்க்க அவகாசம் இல்லாததால் இந்தக் குழு திரும்பியிருந்தது. அவ்வாறிருக்க நாங்கள் விசாரணையில் அளித்த வாக்குமூலங்கள் வெவ்வேறானவை என்று எவ்வாறு கூறமுடியும்?

மேலும், இப்பாடசாலையின் அதிபர் தனது பதவித் தரத்தை கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறித்த அதிபர் 2006ம் ஆண்டு இடம்பெற்ற அகில இலங்கை அதிபர் தரத்திற்கான பரீட்சை எழுதி சித்தியடைந்தவர் என்பதோடு 2012ம் ஆண்டு அதிபர் தரம் இரண்டிற்கு சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு கல்குடாத் தொகுதியில் அதிபர் நியமனம் பெற்ற ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



பாரியதொரு நிதித் தேவையும் பாடசாலை சமூகத்தின் அர்ப்பணிப்பும்

இந்தப் பாடசாலையின் இடநெருக்கடியைக் கருத்திற்கொண்டு அருகிலுள்ள காணியொன்றினைக் கொள்வனவு செய்ய முடிவெடுக்கப்பட்டு சுமார் 35 இலட்ச ரூபாய் தேவையாக இருந்தது. அதனைக் குறுகிய காலத்தில் சேகரித்துக் காணியினைக் கொள்வனவு செய்ய காணிக் கொள்வனவுக் குழு அமைக்கப்பட்டு இதுவரை சுமார் 25 இலட்ச ரூபாய் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29.01.2018ம் திகதி திங்கட்கிழமை முதற்கட்ட பணத் தொகை காணி உரிமையாளருக்கு வழங்கி உறுதிப் பத்திரம் எழுதுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மிகுதியாகத் தேவையாகவுள்ள பணத்தையும் விரைவில் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாரியதொரு சவாலான இலக்கை ஒரு பெண் அதிபராக தனது நேரகாலத்தை அர்ப்பணிப்புச் செய்து அடைவதென்பது ஒரு இலேசான காரியமல்ல. அத்தோடு இதற்காக இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பாடசாலை முகாமைத்துவக் குழு, காணிக் கொள்வனவுக் குழு மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது நிறைவேறும் தருணம் ஓட்டமாவடி 03ஆம் வட்டார வரலாற்றில் பொன் எழுத்தக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும்


இவ்வாறானதொரு அர்ப்பணிப்புடன் செயற்படும் இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களை இந்த மூன்றாம் வட்டாரத்தில் பிறந்த ஒருவர், இந்தப் பாடசாலையின் வளர்ச்சியில் எவ்வித பங்கும் கொண்டிருக்காத ஒருவர், காணிக் கொள்வனவிற்காக ஒரு சதமேனும் வழங்காத ஒருவர் உரிய தரப்பினரிடமிருந்து விசாரிக்காமல் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதானது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். அந்தவகையில் இந்த ஓட்டமாவடி 03ம் வட்டார மக்களுக்கு எங்கள் மீது வீணான பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள விபரங்களைத் தெளிவுபடுத்தும் முகமாக மேற்படி விடயங்கள் செய்தியாகப் பதிவிடப்படுகின்றது.

மேற்படி கருத்துக்கள் அனைத்தும் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய அதிபர் அவர்களினால் © ODDAMAVADI NEWS செய்திச் சேவைக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டவையாகும்.

© ODDAMAVADI NEWS

ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்காக பல லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ள கட்டார் வாழ் பழைய மாணவர்கள்

Posted in

மட்-ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நினைவாக பாடசாலைக்கு பஸ் வண்டியொன்றை அன்பளிப்புச் செய்வதென்று கட்டார் வாழ் பழைய மாணவர் அமைப்பினர் (QATAR OBA) ஏற்கனவே தீர்மானித்திருந்தனர். அதன்படி நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். மேற்படி பஸ் கொள்வனவுக்கான நிதி சேகரிப்பு நிலைமைகளை ஆராயும் QATAR OBAயின் கலந்துரையாடல் கட்டார் லக்பிமையில் 26.01.2018ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன்போது பெருமளவிலான கட்டார் வாழ் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் இதுவரை பஸ் கொள்வனவிற்காக பதினேழு இலட்சத்து எழுபத்தி மூவாயிரத்தி என்பத்தியிரண்டு ரூபாய் தொன்னூற்றி ஒன்பது சதம் (1773382.99) சேமிக்கப்பட்டுள்ளதாகவும் மிகுதியாகத் தேவையாகவுள்ள பணத்தை விரைவாகத் திரட்டி பஸ் வண்டியினைக் கொள்வனவு செய்து பாடசாலைக்கு வழங்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தகவல்-முஹம்மட் அனஸ்

© ODDAMAVADI NEWS

அகில இலங்கை ரீதியில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்

Posted in


முஸ்லிம் கலாச்சார விவகாரங்களுக்கான திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட அறபு பேச்சு போட்டியில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் BA.றிப்கான் முதலாம் இடம்  பெற்று ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்து உள்ளார். 

இந்த மாணவர் ஏற்கனவே பல போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் வெற்றிகளைப் பெற்று ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கும் இவ்வூருக்கும் பெருமை தேடித் தந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவர் ஓட்டமாவடி மற்றும் கல்குடா பிரதேசங்களில் அறிவிப்புத் துறையில் வளர்ந்து வரும் ஒரு அறிவிப்பாளர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின் போது நடாத்தப்பட்ட பல போட்டி நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளராக தனது கடமையினை செவ்வனே நிறைவேற்றியிருந்தார்.

இந்த மாணவருக்கு ஊக்கமளித்து தேசிய ரீதியில் முதலிடம் பெறுவதற்கு உதவியாய் இருந்த பெற்றோர், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ODDAMAVADI NEWS செய்திச்சேவை சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


ODDAMAVADI NEWS

ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு OBA'98இனால் குளிர்சாதனப் பெட்டி அன்பளிப்பு

Posted in
மட்-ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்புக்களுள் ஒன்றான OBA'98இனால் இன்று 24.01.2018ம்கு திகதி குளிர்சாதனப் பெட்டியொன்று பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் OBA'98 சார்பாக அதன் தலைவர் ஏ.பி.எம். றிஸ்வின், ஆலோசகர் டொக்டர். எம்.எச்.எம். ஜெஸீர், முன்னாள் தலைவர் கே.எல்.எம். இர்சாத், செயலாளர் எம்.ஐ. நுபைல், பொருளாளர் ஏ.எம். பைஷர்  மற்றும் நிருவாக உறுப்பினர்களான எம். மன்சூர், ஏ. அன்வர் ஆகியோர் கலந்து கொண்டு குளிர்சாதனப் பெட்டியை அன்பளிப்பாக கைளித்திருந்தனர். 

பாடசாலை சார்பாக மதிப்பிற்குரிய அதிபர் எம்.ஏ. ஹலீம் இஷ்ஹாக் அவர்களும் பாடசாலை முகாமைத்துவக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டு அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்தனர். 




கற்ற காலத்தைத் தாண்டி பழைய மாணவர்களாக தமது பாடசாலைக்கு பெறுமதியான அன்பளிப்புக்களையும் அர்ப்பணிப்புக்களையும் வழங்கி பாடசாலை சமூகத்தை ஊக்குவித்து அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாக OBA'98 பழைய மாணவர் அமைப்பு விளங்குவதாக அதிபர் அவர்கள் இதன்போது பாராட்டியிருந்தார்கள். 

அத்தோடு பிரதான பழைய மாணவர் அமைப்பை ஒன்றுசேர்ப்பதிலும் அதனூடாக இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கும் ஏனைய பழைய மாணவர் அமைப்புக்களோடு சேர்ந்து பாரிய பங்காற்றியவர்கள் OBA'98 அமைப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

© ODDAMAVADI NEWS

மீராவோடையில் "உயிர்காக்க உதவிடுவோம்” அமைப்பு அங்குரார்ப்பணம்

Posted in
மருத்துவ ரீதியான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்நோக்கி வரும் வறியவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிடும் முகமாக "உயிர்காக்க உதவிடுவோம்” என்ற தொனிப் பொருளில் கலந்துரையாடலொன்று இன்று 19.01.2018ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 08.00 மணியளவில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. 

ஏற்கனவே பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டதற்கமைவாக மீராவோடை மற்றும் மாஞ்சோலை பிரதேசங்களைச் சேர்ந்த பொது நலனில் அக்கறையுள்ள பலரும் கலந்து கொண்டு தத்தமது பெருமதியான கருத்துக்களை மிகவும் உணர்வுபூர்வமாகத் தெரிவித்திருந்தனர். குறுகியதொரு கால இடைவெளியில் மீராவோடைப் பிரதேசத்திற்குட்பட்ட சுமார் நான்கு பேர் கிட்னிப் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் சமகாலத்தின் முக்கிய பேசுபொருளாகவும் இது காணப்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டு வந்தன. அந்தவகையில் இவ்வாறான பாதிப்புக்குள்ளாகி வைத்திய செலவுகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு சமூகத்தின அனைத்து தரப்பினரும் இணைந்து ஒரு அமைப்பினை உருவாக்கி அதனூடாக உதவிகளை வழங்கி எமது சகோதரர்களின் பெறுமதியான உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற கருத்து மீராவோடை முஹம்மட் யாசீன் அவர்களால் பேஸ்புக் தளத்தில் முன்வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டிருந்தது. அத்தோடு பலரும் அதற்காக முன்வந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் தங்களது விருப்பத்தினைத் தெரிவித்திருந்தனர். 

இதன் முதற்கட்டமாக இன்றைய கலந்துரையாடல் காணப்பட்டதோடு அமைப்பின் அங்குரார்ப்பணமும் இடம்பெற்றது. இதன்போது செயற்குழு ஒன்றும் தெரிவுசெய்யப்பட்டு செயலாளராக எஸ்.எம். றிப்னாஸ் அவர்களும் தலைவராக ஏ.எல். முஹம்மட் யாசீன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். 
எதிர்காலத்தில் கல்குடா முஸ்லிம் பிரதேச பள்ளிவாயல் நிருவாகிகள், வைத்தியர்கள், கல்விமான்கள், செல்வந்தர்கள், உலமா சபை, வர்த்தக சம்மேளனம் பொதுமக்கள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஒரு நிருவாக சபையை உடனடியாக அமைத்து செயற்படுவதென்றும் ஏகமனதான முடிவு எட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

© ODDAMAVADI NEWS









போதைப் பொருளை ஒழிப்பவர்களே போதையை வளர்க்கின்றனர் - எம்.ரி.எம். ஹைதர்

Posted in

போதையை ஒழிப்போம் துண்டுபிரசுரம், போதை ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு, போதை ஒழிப்பு நடைபவணி இப்படியெல்லாம் பல்வேறுபட்ட பொது அமைப்பினரும், சில அரசியல்வாதிகளும் போதை பொருள் பாவனையுள்ள பிரதேசங்களில் இவற்றை ஒழிப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இருந்தபோதும் இவ்வாறான பிரதேசங்களில் போதை மாத்திரை வியாபாரம் குறைந்ததாகவும் இல்லை, வியாபாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு சென்றுவந்தவர்கள் திருந்தியமாகவும் இல்லை. அவர்களுக்கெதிராக அப்பிரதேசங்களிலுள்ளவர்கள் ஊரின் நன்மைகருதி எதுவிதமான தீர்க்கமான முடிவுகளை எடுத்ததாகவும் இதுவரை தெரியவில்லை.
இவ்வாறான செயற்பாடுகளை இன்னும் இவ்வாறான பிரதேசங்களில் நீடிக்கவிட்டால் இதனால் பாதிக்கப்படுவது அப்பிரதேசங்களிலுள்ள அரசியல்வாதிகளோ அல்லது கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகும் போதை மாத்திரை குலிசை வியாபாரிகளோ அல்ல அப்பிரதேசங்களில் வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயமே என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும். பொதுப்படையாக நம் பேச்சுவழக்கில் சொல்வதென்றால் எதுவிதமான செல்வாக்கும் அற்ற சாதாரண போதை மாத்திரை விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டால் வெளிவராத வகையில் அவருக்கெதிராக சட்டங்கள் இறுக்கப்பட்டு, பிணையில் வெளிவராத நிலையில் ஆழாக்கப்படுகின்றார். இதுவே பொலிஸ் மற்றும் அரசியல் செல்வாக்குள்ள ஒரு போதை மாத்திரை வியாபாரி கைது செய்யப்பட்டால் அவருக்கெதிராக சட்டங்கள் இலகுவாக்கப்பட்டு, இரவோடு இரவாக பிணை அனுமதியும் வழங்கப்படுகின்றது. இவை அனைத்தையும் செய்பவர்கள் பிள்ளையையும் கிள்ளவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் சில அரசியல்வாதிகள் அவர்களின் அற்பசொற்ப அரசியல் வாழ்க்கைக்கு இளைஞர் சமுதாயம் பழியாகின்றது.
போதையை ஒழிக்க வேண்டும், போதைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகின்ற எந்த அரசியல்வாதியாவது இவற்றை தடுப்பதற்கு இறுக்கமான சட்டங்களை நடைமுறைப்படுத்தியதுண்டா? அல்லது சட்டங்களை ஏற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தில் உரையாற்றி அதற்கான தீர்க்கமான சட்டத்தினை இயற்ற பாராளுமன்றத்தில் முயற்சித்ததுண்டா? இது உள்ளுர் அரசியல் சபைகளை ஆளுபவர்களுக்கும் பொறுந்தும். சில அரசியல்வாதிகளும், அரசியல் அதிகாரம் கொண்ட நபர்களும் தங்களது அதிகாரத்தினை ஒரு சமூகம் அழியும் செயற்பாட்டிற்கும், தங்களது அரசியல் இலாபங்களுக்காகவும் மாத்திரம் பயன்படுத்திக்கொண்டு நம் சமூகத்தினை சீரழிக்க போதை மாத்திரை வியாபாரிகளுடன் துணைபோகின்றனர். இதற்கு தீர்க்கமான இவ்வாறான பிரதேசங்களை மையப்படுத்தி சிந்தித்து செயற்படக்கூடிய இளைஞர்கள் ஒன்றிணைந்து இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

-MTM. Haither-

© ODDAMAVADI NEWS

மீராவோடை எம்.ஜே.எம். இர்பானின் சத்திர சிகிச்சைக்கு உங்களால் முடியுமானளவு உதவி செய்ய முன்வாருங்கள்

Posted in
மீராவோடையைச் சேர்ந்த முஹம்மது ஜுனைட் முஹம்மது இர்பான் என்ற எமது சகோதரர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு உடனடியாக சத்திரசிகிச்சை மூலம் இரு சிறுநீரகங்களையும் மாற்ற வேண்டும் என்றும் அதற்காக சுமார் முப்பத்தைந்து இலட்ச ரூபா செலவாகும் என்றும் கண்டி வைத்தியசாலை வைத்திய நிபுணர் டொக்டர் டப்ளியு.ஏ.எம். வஸீல் அவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அப்பாரிய தொகையினை செலுத்தி தனது உயிரினை பாதுகாத்துக் கொள்ளும் பொருளாதார வசதி நிலையில் சகோதரர் இர்பான் அவர்களோ அவரின் குடும்பமோ இல்லை.

ஆகவே எமது ஊரிலுள்ள தனவந்தர்கள், உதவி நிறுவனங்கள் மற்றும் அனைவரிடமிருந்தும் முடியுமானளவு உதவியை சகோதரர் இர்பான் அவர்கள் தனது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக எதிர்பார்க்கின்றார்.

முடியுமானவர்கள் முடியுமானளவு உதவியை நேரடியாகவோ அல்லது இங்கு கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கினூடாகவோ செலுத்தி ஒரு சகோதரரின் உயிரைப் பாதுகாக்க உதவிடுமாறு எமது செய்திச் சேவை சார்பாக அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். உங்களது வாழ்விலும் மறுமையிலும் அல்லாஹ் சிறந்ததையே நாடப் பிரார்த்திக்கின்றோம்.

MJM. Irfan, ACC No: 112454135137, Sampath Bank PLC, Oddamavadi.

தொடர்புகளுக்கு - 0767897044

© ODDAMAVADI NEWS

மாஞ்சோலை உப தபாற்கந்தோரின் அவலநிலை

Posted in
35 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இத்தபாற்கந்தோர் தற்போது மாஞ்சோலை ஆஸ்பத்திரி வீதியில் சிறிய இடமொன்றில் அமையப்பெற்றுள்ளது.  அச்சிறிய இடம் தபாற்கந்தோருக்கோ அரசாங்கத்திற்கோ சொந்தமானது அல்ல. அதன் உரிமையாளர் வேறு. அதற்கோ வாடகை செலுத்த வேண்டியுள்ளது. வாடகையில் நான்கில் ஒரு பங்குதான் அரசினால் வழங்கப்படுகிறது மீதி தபாற்கந்தோருக்கு பொறுப்பானவரால் வழங்கப்படுகிறது.

இத் தபாற்கந்தோருக்கு ஒரு நாளைக்கு நூற்றிற்கு மேற்பட்ட பயனாளிகள் வருகை தருகின்றனர். 700 இற்கு மேற்பட்டவர்கள் மாதாந்த சம்பள தொகை பெறுகின்றனர். மழை காலங்களில் அலுவலக காகிதாதிகளுக்கு சேதங்கள் ஏற்படுகிறது.
இதை எந்த அரசியல்வாதியோ சமூக சேவை நிறுவனங்களோ கண்டுகொள்ளவில்லை.
மாஞ்சோலை மாதிரி கிராமமானது ஆரம்பிக்கப்படும்போது தபாற்கந்தோருக்கு ஒதுக்கப்பட்ட இடம் ,நிதி கூட ஒரு சிலரின் நடவடிக்கையால் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது.
இனியாவது இந்த அவலநிலை இல்லாமல் மாஞ்சோலை உபதபாற்கந்தோருக்கு சரியான இடமொன்றை பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகள் முன் வருவார்களா ?
சமூக சேவை நிறுவனங்களாவது கை கொடுக்குமா ?

தேர்தல் நெருங்கிவிட்ட காரணத்தால் பல சேவைகள் தாருமாறாக இடம்பெற்று கொண்டிருக்கும் வேளையில் அதில் ஒன்றாக இதை செய்ய நம்மூர் அரசியல்வாதிகள் முன்வருவார்களா என பார்ப்போம்.

-Haris AS-

© ODDAMAVADI NEWS

ஓட்டமாவடி பிரதேச சபைத் தேர்தலும் எதிர்பார்ப்பில் ஏமாற்றமடையப் போகும் வேட்பாளர்களும்

Posted in
 - அரசியல் ஆய்வு -

விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் அதுவும் குறிப்பாக ஓட்டமாவடிப் பிரதேசத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை ஆகிய இரு பிரதேச சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ACMC), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), மஹிந்தவின் கூட்டு எதிர்கட்சி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி (PMGG), அலிசாஹிர் மௌலானாவின் சுயேட்சைக் குழு ஆகியவை களமிறங்கலாம் என்று பரவாலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிலும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் அதிக போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இடம்பெற்ற முஸ்லிம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலேயே பொதுவாகப் போட்டியிட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ தத்தமது சின்னங்களில் போட்டியிட முடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான உறுதியான ஆசனங்களாக 10உம் போனஸ் ஆசனங்களாக 6உம் காணப்படுகின்ற நிலையில் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால் ஒவ்வொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தி தலா 10 வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும். அவ்வாறெனின் மேற்படி UNP, SLMC, ACMC சார்பாக மொத்தம் 30 வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள்.

ஆனால் UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடவே பெரும்பாலும் உடன்பட்டிருப்பதால் மூன்று கட்சிகளையும் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலே தயாரிக்க முடியும். அவ்வாறு ஏற்படின் தனித்தனியாக கட்சிகள் போட்டியிடும்போது தனக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்த்திருந்த மேற்படி மூன்று கட்சிகளையும் சேர்ந்த சுமார் 20 பேரின் வேட்பாளர் கனவும் கலைவதோடு அவர்களது எதிர்பார்ப்புக்கு பாரிய ஏமாற்றமும் ஏற்படப் போகின்றது.

UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட அதிக சாதகங்கள் இருப்பதனை இக்கட்சிகளின் தலைமைகள் தங்களது அடுத்த மட்டத்திற்கு அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அந்தந்த கட்சிகள் சார்பாக யாருக்கு முன்னுரிமை கொடுத்து தலைமைத்துவம் தெரிவு செய்யப் போகின்றது என்று ஒரு சிக்கலான நிலை ஏற்படும். அவ்வாறு நடக்கும்போது வேட்பாளருக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாது ஏமாற்றமடைபவர்கள் தத்தம் கட்சி மீது அவநம்பிக்கை ஏற்பட்டு விரக்தி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுதவிர ஏற்கனவே சிலர் தாங்கள் தேர்தலில் இறங்கப் போவதாக பிரச்சாரம் செய்து வந்திருந்தமையும் ஆனால் தற்போது கூட்டணி அமையும் சந்தர்ப்பத்தில் குறித்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்பதும் தெளிவாகின்றது.

ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான தேர்தலில் UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட முன்வந்தால் இக்கூட்டணி சபையைக் கைப்பற்றுவதற்கான நூற்றுக்கு தொன்னூற்றைந்து வீத வாய்ப்புக்கள் உள்ளது. இவ்வாறு கூட்டணி அமைத்து சபைகளை கைப்பற்றுவதையே பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தனது பிரதான திட்டமாக வகுத்துள்ளது. அவ்வாறு ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான தேர்தலில் UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் கூட்டணியாகக் களமிறங்கினால் கூட்டணி சார்பாக வரும் 10 வேட்பாளர்களில் கட்சிகள் வாரியான ஒதுக்கீடாக SLMC – 04 வேட்பாளர்கள், ACMC - 03 வேட்பாளர்கள், UNP -03 வேட்பாளர்கள் உள்ளடங்கிய பட்டியலே தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

அவ்வாறு அமையுமிடத்து ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான தேர்தலில் UNP சார்பாக ஹனீபா (மம்மலி) ஜீஎஸ், புர்க்கான், சபீர் மௌலவி ஆகிய மூவரும், ACMC சார்பாக ஐ.ரி. அஸ்மி, கே.பி.எஸ். ஹமீட் (முன்னாள் தவிசாளர்),நௌபர் (முன்னாள் பிரதித் தவிசாளர்) ஆகிய மூவரும் SLMC சார்பாக விஜித அன்வர், முஹாஜிரின் ஆசிரியர், அன்வர் ஆசிரியர், மாஞ்சோலை கபீர் ஹாஜியார் ஆகிய நால்வரையும் அடக்கிய மொத்தம் 10 பேரைக் கொண்ட கூட்டணி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பெயர்ப் பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் பெண் வேட்பாளர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் இந்த மூன்று கட்சிகளின் கூட்டணியானது அமையும் பட்சத்தில் ஓட்டமாவடி பிரதேச சபையை இலகுவாகக் கைப்பற்றும் என்பதில் ஐயம் இல்லை.

இருந்தாலும் SLMC மற்றும் ACMC ஆகிய இரண்டு கட்சிகளும் கடந்த காலங்களில் பாம்பும் கீரியும் போன்று அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். இவ்வாறிருக்க கூட்டணியாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு ஒரே மேடையில் பிரச்சாரத்தினை ஒற்றுமையாக மேற்கொள்ளப் போகின்றார்கள், கடந்தகாலங்களில் ஆளாலுக்குக் கூறிய குற்றச்சாட்டுக்களை மறந்து எவ்வாறு பொது மேடையில் பேசி வாக்குக் கேட்கப் போகின்றார்கள்? அதனை வாக்களார்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்ற சுவாரசியமே எல்லாவற்றையும் மிஞ்சி நிற்கின்றது.

இக்கூட்டணி தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான (SLFP) வேட்பாளர் பட்டியல் சட்டத்தரணி மாஹிர் அவர்களின் தலைமையில் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. இந்தக் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஹாரூன் ஸஹ்வி அவர்கள் ஒரு பின்புலத்தைக் கொண்டு காணப்படுவதாலும் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கல்குடாத் தொகுதி, வாழைச்சேனை, ஓட்டமாவடிப் பிரதேசத்திற்கான அமைப்பாளர்கள் நமது ஓரைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வழிகாட்டல் இருக்கும் என்பதாலும் இத்தேர்தலில் SLFPஉம் தாக்கம் செலுத்தக் கூடிய கட்சியாக இருப்பதோடு எதிர்கட்சியாவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் உள்ளது.

இதுதவிர PMGGஉம் களமிறங்குவதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகின்றது. இதுதவிர ஹாபிஸ் நஸீர் அவர்களுடனான முரண்பாட்டின் பின்னர் மௌலானாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயட்சைக்குழு, கருணா அம்மானின் வழிகாட்டலில் கூட்டு எதிர்க்கட்சி ஒரு பெயரிலும் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவருகின்றது.

அத்தோடு UNP, SLMC, ACMC கூட்டணியில் வாய்ப்புக் கிடைக்காதவர்கள் SLFP, PMGG போன்ற கட்சிகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும்போது SLFP, PMGG கட்சிகள் வெற்றிபெறுகின்றனவோ இல்லையோ முன்னரைவிட புதிய வருகைகளினால் பலமடையும் என்பதும் உண்மை.

எவ்வாறாயினும் UNP, SLMC, ACMC கூட்டணி அமைந்தால் ஓட்டமாவடி பிரதேச சபையை இலகுவாகக் கைப்பற்றும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதோடு, அவ்வாறு கூட்டணி அமையும் சந்தர்ப்பத்தில் இம்மூன்று கட்சிகளையும் சேர்ந்த தங்களை வேட்பாளர்களாக நிறுத்துவார்கள் என்று பாரிய எதிர்பார்ப்புடன் இருந்த ஒரு தொகை தீவிர அரசியல் செயற்பாட்டாளர்கள் ஏமாற்றமடையப் போவதும் அரசியல் எதிரிகளுடன் எவ்வாறு ஒன்றிணைந்து கூட்டணியாக இத்தேர்தலில் செயலாற்ற முடியும் என்று கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஒரு குழப்பமான நிலைப்பாடு ஏற்படப் போவதும் தின்னம்.

-அபு முஜாஹித்-

© ODDAMAVADI NEWS

ரெயில்வே அத்தியவசிய சேவையாக அறிவிப்பு - இராணுவத்தினருக்கு ரெயில்வே துறையில் பயிற்சி

Posted in

தற்போது இடம்பெற்றுவரும் ரெயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ரெயில்வே சேவை நாட்டின் அத்தியவசிய சேவையாக இன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியாலளர் மாநாட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்தவகையில் வேலைக்கு உடனடியாகத் திரும்பாத ரெயில்வே சேவை ஊழியர்கள் பணியிலிருந்து தாமாக விலகிக் கொண்டதாகக் கருதப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். அத்தோடு ரெயில்வே பணிப் பகிஷ்கரிப்பினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் மறு அறிவித்தல் வரை தனியார் பேரூந்துகளை அதிவேக நெடுந்சாலைகளில் கட்டணமின்றி பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் ரெயில்வே சேவையில் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றால் அதனை சுமூகமாக்குவதற்காக இராணுவத்தினருக்கு ரெயில்வே சேவையின் அனைத்துத் துறைகளிலும் பயிற்சிகளை வழங்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

© ODDAMAVADI NEWS

மட்டக்களப்பில் சிக்கிய பாரிய தொகைப் பாம்புகள் அனர்த்தமொன்று ஏற்படுவதற்கான முன்னறிவித்தலா?

Posted in
மட்டக்களப்பு நாவலடி கடற்பிரதேசத்தில் மீனவர்களின் கரைவலைகளில் ஓரிரு தினங்களாக பெருமளவிலான பாம்புகள் சிக்கியுள்ளன. இதனால் மீனவர்களும் பொதுமக்களும் அதிகம் அச்சமடைந்துள்ளதோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை ஆராய்ந்து அனர்த்தங்கள் தொடர்பிலான அறிவித்தல்களை முன்கூட்டி அறிவிப்பதன் மூலம் தங்களை அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இடம்பெற்ற சுனாமி அனர்த்தம், மற்றும் 2011ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு ஆகியவை நிகழ்வதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு பாரியளவில் பாம்புகள் கரைவலைகளில் சிக்கிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி அனுபவங்களினாலும் தற்போது அதிக சீரற்ற காலநிலை நிலவி வருவதன் காரணமாகவும் அத்தோடு இந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையம் விரைவில் பூகம்பம் ஏற்படலாம் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளமையாலும் மக்கள் இவ்வாறு பாம்புகள் அதிகளவில் சிக்கியுள்ளமையானது ஒரு அனர்த்தத்திற்கான முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று பெரிதும் அச்சப்படுகின்றனர்.




© ODDAMAVADI NEWS