Follow me on Twitter RSS FEED

மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Posted in
-M.T. Haither Ali-
மீராவோடை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் 2019.02.10ஆம் திகதி - ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் வைத்தியசாலையின், ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள், கிடைக்கப்பெற்ற விடயங்கள் மற்றும் கிடைக்க இருக்கின்ற விடயங்கள் என்பன தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. 

இச்சந்திப்பில், கலந்தாலோசிக்கப்பட்ட மிக பிரதானமான விடயங்களாக, ஆளணிக்கேற்ப வைத்தியர்களை பெற்றுக் கொள்வதற்காக இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள், கிழக்கு மாகாண ஆளுநரை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாக கையளிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் என பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அத்துடன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்த பல கோரிக்கைகளில் ஒன்றான மகப்பேற்று விடுதியை (Maternity ward) இயங்கச் செய்வதற்கு குடும்பநல உத்தியோகத்தரின் (Midwife) பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்ததற்கமைவாக குடும்பநல உத்தியோகத்தர் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், இன்றைய அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின்போது மகப்பேற்று விடுதி/பிரசவ விடுதி (Maternity ward) மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு 24 மணித்தியாலங்களும் இயங்குவதனையும் மற்றும் பல் சிகிச்சை நிலையம் (Dental clinic center) ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய திங்கள் தொடக்கம் சனி வரையான ஆறு நாட்களில் தொடராக இயங்குவது தொடர்பான தகவலையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் அறிவித்தல்களை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் 2019.02.15ஆம் திகதி - வெள்ளிக்கிழமை பிரதேசத்திலுள்ள ஜூம்ஆப் பள்ளிவாசல்களில் ஜூம்ஆவின் பின்னர் இது தொடர்பான அறிவித்தல்களை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் இவ்வைத்தியசாலை ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளில் வீழ்ச்சியில் காணப்பட்டபோதிலும், வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் தப்போதுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோரின் தொடர் முயற்சிகளினாலும், பல்வேறுபட்ட உயர் மட்டத்திலான சந்திப்புக்களின் மூலமாகவும் பல முன்னேற்றங்களை இவ்வைத்தியசாலை இப்போது கண்டு வருகின்றது.

ஒரு விடயத்தினை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் நாம் பல்வேறுபட்ட தொடர் முயற்சிகளை மேற்கொண்டு பலதரப்பட்ட சந்திப்புக்களையும், காத்திருப்புக்களையும் மேற்கொள்வதனூடாகவே அதன் பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள மீராவோடை வைத்தியசாலையானது முஸ்லிம் மற்றும் தமிழ் இரு இன மக்களும் பயன்படுத்தி வரும் ஒரு வைத்தியசாலையாகும் காணப்படுகின்றது.

0 comments: